Thursday, 26 April 2012

திருமண அழைப்பிதழ்


பிறப்பு: தினசரி.காம்

வாசலில் பைக் நிறுத்தும் சத்தம் கேட்டது. ஐன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் கௌரி. அவளுடைய கணவன் ராமு தான்.
"பசங்களா.. ஓடுங்க.. ஓடுங்க.. அங்கிள் வந்தாச்சு..!" ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த அக்கம் பக்கத்து வீட்டு பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருந்தாள் கௌரி.
ராமு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
"ஹாய் அங்கிள்..!" என்றது ஒரு வாண்டு. "பை அங்கிள்," என்றது இன்னொன்று.
இது இன்று நேற்று நடப்பதல்ல. இந்த வீட்டுக்கு குடிவந்த இரண்டாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் வழக்கம்.
கௌரிக்கு சுமாரன படிப்புதான். குடும்பத்தைக் கவனிப்பது தான் பிரதான வேலை. அதோடு அக்கம் பக்க வீடு மட்டுமல்லாமல் அக்கம் பக்க தெரு என அனைத்து கண்ணில் படுகின்ற யாருடனும் சகஜமாக பழகிவிடுவாள். ஆனால் ராமு வருவதும் தெரியாது போவதும் தெரியாது. அவ்வளவு அமைதி. கௌரி அப்படியே ராமுவுக்கு நேர் எதிர்.
இந்த இரண்டு மூன்று தெருக்களில் யார் வீட்டில் என்ன விசேஷம் நிகழ்ந்தாலும் இவளும் ஓர் உறுப்பினராய் ஆஜராகிவிடுவாள். அந்த வீட்டு நண்பர்களுக்கு ஒத்தாசையாக உதவிகளைச் செய்து கொடுப்பாள். அதனாலேயே கௌரியின் குடும்பத்தைப் பற்றி அனைவருக்கும் மரியாதை ஏற்பட்டிருந்ததது. நல்ல உதவி செய்யும் மனப்பான்மை. அதை தடுக்காத கணவன்.. இப்படி நிறைய ப்ளஸ் பாயிண்டுகள் கௌரியிடம் இருந்தன.
வீட்டிக்கு வந்த ராமு கால் கை கழுவி பிரஷ்ஷாகி டிவி ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தான்.
காபியை ஆற்றிக் கொண்டே ராமுவின் பக்கத்தில் அமர்ந்தாள் கௌரி.
"என்ன ரொம்ப டயர்டா இருக்கீங்க.. வேலை ரொம்ப டைட்டா..?"
"ஆமாம்பா. வேலைன்னா அப்படி இப்படி இருக்கத்தானே செய்யும்."
"அது இல்லீங்க.. உடம்பு நல்லா இருந்தாத் தானே உழைக்க முடியும். அதான் கேட்டேன்."
"அதெல்லாம் ஒண்ணுமில்லை கௌரி.. நான் நல்லாத் தான் இருக்கேன்."
"ஏங்க.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே.. நம்ம புதுத்தெரு உமாபதி இருக்கார்ல அவர் பொண்ணு ஹேமாவுக்கு நாளை மறுநாள் கல்யாணம். ஒவ்வொரு வீடா பத்திரிக்கை கொடுத்துகிட்டு வர்றாங்க. இன்னும் நம்ம வீட்டுக்கு வரல. நாளை மதியத்துக்குள்ள வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன். அவங்களுக்கும் கல்யாண வேலை அது இதுன்னு  இருக்கும்ல.. நேத்து கூட அவங்க குல தெய்வம் கோவிலுக்கும் போய்ட்டு வந்தாங்களாம்.. பக்கத்து வீட்டு ராணி அக்கா சொன்னாங்க.."
பேசிக்கொண்டே போனாள்.
ராமு அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
"அந்த கல்யாணத்துக்கு நான் எந்தப் புடவையை கட்டுறது..?" பீரோவைத் திறந்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த புடவைகளைக் காட்டினாள்.
"ஏய்.. இன்னும் பத்திரிகையே வரலை. அதுக்குள்ள என்ன அவசரம்?"
"அது இல்லீங்க.. இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. சீக்கிரம் சொல்லுங்க நான் எந்தப் புடவையைக் கட்ட?" விடாப்பிடியாக நச்சரித்தாள்.

*
மறுநாள் மத்தியான நேரம்...
அலுவலகத்தில் ராமு தன் டிபன் பாக்ஸை திறந்து கொண்டிருந்தான். மொபைல் ஒலித்தது.
"சொல்லுடா.. என்ன இந்நேரத்தில?"
"ஒண்ணுமில்லீங்க.. மணி ரெண்டு ஆவுது. இது வரைக்கும் அவங்க வீட்லேர்ந்து பத்திரிகை எதுவும் கொண்டு வரல. மனசு ஒரு மாதிரியா இருக்கு. அதான் போன் பண்ணினேன்."
"வராத பத்திரிகைக்கு ஏண்டீ இப்படி அலட்டிக்கிறே..?"
"ராணி அக்கா வீட்டுக்கெல்லாம் நேத்தைக்கே பத்திரிகை வெச்சிட்டு போய்ட்டாங்களாம். அந்த நேரம் பார்த்து, நான் கடைக்குப் போயிருந்தேன் போல.. அந்தப் பொண்ணை வேற எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவ்ளோ அழகு. அமைதியான குணம். அதாங்க மனசு ஏதோ பண்ணுது."
"சரி.. சரி.. அதை சாயங்காலம் நான் வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம்.. போனை வெச்சிட்டு ஹாயா தூங்கு."
இணைப்பை துண்டித்தவனுக்கு மனசு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. நெற்றியைத் தேய்த்துக் கொண்டான்.
கௌரிக்கு தூங்க முடியவில்லை.
'நேராகவே போய் கேட்டுவிடலாமா? என்னை ஏன் மறந்துட்டீங்க.. சே.. நல்லாயிருக்காது. எப்படியும் சாயங்காலத்துக்குள்ளே வந்து கொடுப்பாங்க.' மனசுக்குள் பேசிக்கொண்டாள்.

*
காலிங் பெல் அலறியது..
அவசர அவசரமாக ஓடிப் போய் கதவைத் திறந்தாள். பக்கத்து வீட்டு ராணி அக்கா. கையில் ஒரு நாலைந்து புடவையோடு நின்று கொண்டிருந்தாள்.
"கொளரி.. இதுல எந்தப் புடவையை கல்யாணத்துக்கு கட்டிக்கலாம். நீயே செலக்ட் பண்ணேன்." உரிமையோடு கேட்டாள்.
கௌரிக்கு அழுகையே வந்திடுவது போல் இருந்தது. வேண்டா வெறுப்பாக ஒன்றை எடுத்து நீட்டினாள்.
 
*
மாலை 6 மணி..
ராமு வீட்டுக்கு வந்து சேர்ந்தான். கௌரி சோர்வாக இருந்தாள்.

"என்ன கண்ணா.. இங்க உற்சாகமாய் கௌரின்னு ஒரு பொண்ணு சுத்திகிட்டு இருப்பாளே.. அதைப் பார்த்தியா..?" கௌரியின் கன்னம் தொட்டு வருடினான். அவன் கையைத் தட்டிவிட்டாள்.
'ஒரு சின்ன விஷயம், துறு துறுன்னு இருந்த என்னை இப்படி தடுமாற வெச்சிடுச்சே.' வெறுமையாக மனதில் உணர்ந்தாள்.
பட்டுப்புடவை சரசரக்க கையில் தேங்காய் பழத் தட்டுகளோடு தெருவில் சீர்வரிசை கொண்டு போனார்கள் பெண்கள். கோயிலை நோக்கி அந்த ஜனம் நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் போய் சேர்ந்ததும் மாப்பிள்ளை அழைப்பு தொடங்கிவிடும்.
பக்கத்து வீட்டு ராணி அக்கா ஓடிவந்தாள்.
"கௌரி நீ இன்னும் கிளம்பலயா..? நாங்கல்லாம் ரெடியாகிட்டோம். வா கோவிலுக்குப் போய்ட்டு மாப்பிளை அழைப்புக்கு நேரமாயிட்டு இருக்கு." மகிழ்ச்சியோடு வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவளிடம் தங்களுக்கு திருமண அழைப்பு இல்லை என்பதை சொல்வதற்கு கௌரிக்கு கொஞ்சம் அவமானமாகவே இருந்தது.
"அக்கா.. எங்க வீட்டுக்காரங்க இப்பத்தான் ஆபீஸ்லேர்ந்து வந்தார். கொஞ்ச நேரத்தில நாங்க வந்திடறோம். நீங்க கிளம்புங்க." நாகரிகமாய் நழுவினாள் கௌரி.
ராணி வாசலை விட்டு இறங்கியதும், கௌரியின் கைகள் கதவை சாத்தின.
அவள் கண்கள் நிறைய கண்ணீர் திரண்டிருந்தது. அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்படியெல்லாம் உரிமையோடு பேசுவார் அந்த உமாபதி. அந்த மனுஷன் குடிச்சா கூட 'நீ என் பொண்ணு மாதிரிதான்ம்மா.. நீ என் பொண்ணு மாதிரி,'ன்னு புலம்புவாரே... வெயிலில் வெளியில் எங்காவது பார்த்து விட்டால், 'என்ன பொண்ணுமா நீ.. இந்த கொளுத்துற வெயிலில் வெளியில சுத்திகிட்டு இருக்கே. உடம்பு என்னத்துக்கு ஆகுறது.' - அப்படியே என் அப்பாவின் சாயலில் அல்லவா கேட்பார்.
மனசு அலை பாய்ந்து கொண்டிருந்தது கௌரிக்கு.
பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ராமு, "என்ன கண்ணா.. நீ வேணா கல்யாணத்துக்குப் போய்ட்டு வாயேன். அவங்க நிச்சயம் மறந்து தான் போயிருப்பாங்க. நீ போனா கண்டிப்பா உன்னை வரவேற்ப்பாங்க. போய்ட்டு வாயேன்.."
"நீங்க வரலையா..?"
"பத்திரிகை இல்லாம எப்படின்னுதான் யோசிக்கிறேன்."
"என் புருஷனைவிட எனக்கு எதுவும் முக்கியமில்லை."
அப்படியே அவனின் தோளைத் தழுவியிருந்தாள் கௌரி. ராமுவின் மார்பில் மணிகளாய் உருண்டு கொண்டு இருந்தது அவள் கண்ணீர்.
"கண்ணா.. நாம ஒண்ணு பண்ணுவோம். இன்னிக்கு நீ போய் உட்கார்ந்து டீவி பாரு. நான் சாப்பாடு ரெடி பண்ணுறேன். என் சமையல் எப்படி இருக்கும் தெரியுமா..? இத்தனை நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே-ன்னு நீ ஃபீல் பண்ணுவே.. பாரு."
கண்களைத் துடைத்துக் கொண்டாள் கௌரி.
பரபரவென அடுக்களையில் வேலை தொடங்கியது. சுடச் சுட சாப்பாடு தயார். டைனிங் ஹாலில் பரிமாறினான் ராமு.
கோயிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு தொடங்கி விட்டிருந்தது. தூரத்தில் நாகஸ்வரமும் தவிலும் ஒலித்தன. ராமு, டிவியின் ஒலியைக் கூட்டினான். ஜன்னலை சாத்திவிட்டு ஏசியை ஆன் செய்தான். "ஏசி வெளியில் போகும்.. அதான் கதவை சாத்தினேன்.." காரணம் சொன்னான்.
கௌரியின் முகத்தில் வறட்டுப் புன்னகை.
மேள தாள ஒலி கூடியது. டிவி நிகழ்ச்சி பற்றி கௌரியிடம் பேசி அவளை திசை திருப்பினான் ராமு. அதற்குள் மேள தாள ஒலி தேய்ந்து கொண்டே போனது. ஊர்வலம் வீட்டை கடந்து விட்டது. இருவரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள்.
பாத்திரங்களை ஒழுங்குபடுத்திவிட்டு படுக்கைக்குத் திரும்பினான் ராமு.
கட்டிலில் சாய்ந்திருந்தாள் கௌரி. அவளை அணைத்து தூங்கத் தொடங்கினான் ராமு. கௌரி தூங்கிவிட்டாள்.
அவன் கண்களில் இருந்து கசிந்தது கண்ணீர்... கௌரிக்குத் தெரியாது, மணப்பெண் ஹேமா, ராமுவின் முன்னாள் காதலி என்பது.

செண்பகராமன்


எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோரச்செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான். என்றால் நம்புவீர்களா அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். ஆம் தோழர்களே அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடையம் தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது.

இத்தனைக்கும் செண்பகராமன் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரத்திற்காய் போற்களமாடிய வீரர்கள் யார் என்று எமது தமிழ் சகோதரர்களிடம் ஒரு கேள்வி கேட்டால்; உடனே சுபாஸ் சந்திரபோஸ், பகத்சிங் என ஒரு பட்டியலை தருவார்கள். அவர்களிடம் நான் கேட்கிறேன் தமிழர்கள் ஒருவரும் போராடவில்லையா? அல்லது அவர்களின் போராட்டத்தில் வீரியம் இல்லையா? எண்ணற்ற தமிழ் மறவர்கள் விடுதலைக்காக வீரகாவியமானார்கள். வெள்ளையனின் பீரங்கிகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் முன்னால் வாளும் வேலும் கொண்டு போராடினால் சாவு நிச்சயம் என்று தெரிந்தும்; அடிமையாக வாழ்வதைவிட செத்துமடிவதே மேல் போராடிய வீரபாண்டிய கட்டப்பொம்மன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார் போன்ற எண்ணற்ற தமிழ் மறவர்களையெல்லாம் பார்க்க உங்களுக்கு வீரர்களாக தெரியவில்லையா? இப்படி தமிழர்கள் இருப்பதால் தான் தமிழினத்தின் வரலாறு மண்ணோடு மண்ணாகிப் போகிறது. தமிழர்களாகிய நாங்கள் கூட தமிழ் வீரர்களை நினைவுகூறாவிட்டால் வேறு எவன் நினைவுகூறுவான்? கேரளாவிலோ அல்லது ஆந்திராவிலோ போய் கேட்டுப்பாருங்கள் வீரபாண்டிய கட்டப்பொம்மன் யார் என்று? ஒரு பத்து போராவது சரியான பதில் தருவார்களா? இல்லை நண்பர்களே நாங்கள் தான் எங்கள் வரலாற்றை பாதுகாக்கவேண்டும். இல்லையென்றால் காலம் எம் வரலாற்றை மறந்துவிடும். இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு தருகிறேன்.

இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.

பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனைபேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கு அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.

ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.

தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களைத் தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.

தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.

ஹிட்லர் மன்னிப்பு கோரல் 

ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.
சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.

முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடையில் ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது.  அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார்.

இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை”(ஐ.என்.வி)  என்று பெயர் கொடுக்கப்பட்டது.

ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.

யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.

இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல்என் உயிர் பிரியத்தான் ோகிறது.எனினும் நான் இறந்த பின்எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்றுநான்பிறந்த தமிழ் நாட்டில்என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடுமறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும்என் போராட்டத்தை தொடர்ந்து நீநடத்தவேண்டும்நெஞ்சை ருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.

பொத்திவெச்ச மல்லிகை மொட்டு...

ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த கதைய படிச்சேன் . என்னோட நண்பன் ஒருவன் இப்படிதான் கல் இருந்துதுன்னு சொல்லி சென்னை சைதாபேட்டையில் உள்ள ஒரு ஹாஸ்பிடல்ல இருந்தான் ... இந்த கடைய படிக்கும் பொது அவன் தான் நினைவுக்கு வந்தான் .... ராஜேஷ்.... சத்தியமா உன்ன சொல்லல .... 

கதைப்படி கதாநாயகன் ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன். எப்படின்னா? ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் கூட ஜென்ஸ் டாக்டராக தான் பார்த்து போவான். ஒரு முறை வேளச்சேரியில் தங்கி வேலை பார்த்துக்கொண்டு இருந்த பொழுது, கடுமையான சுரம். அருகில் இருந்த மருத்துவமனைக்கு நண்பன் ஒருவன் அழைத்துச்சென்றான், இவன் நேரம் அங்கிருந்த ஜென்ஸ் டாக்டர் லீவ், வேறு வழியே இல்லாமல் லேடி டாக்டரிடம் காட்டவேண்டியதாக போச்சு. அவுங்க டெஸ்ட் செஞ்சுட்டு ஊசி மருந்து எழுதி கொடுத்து வாங்கி வர சொன்னாங்க, வாங்கிட்டு வந்த மருந்தை டாக்டரிடம் கொடுத்தான்.

டிஸ்போசல் சிரஞ்ஜில் மருத்தை எடுத்து அதை ஒரு அமுக்கு அமுக்கி ரெண்டு சொட்டு மருத்து சும்மா சாமிக்குன்னு தரையில் விழுந்ததும், டாக்டர் சொன்னாங்க கொஞ்சம் பேண்டை இறக்குங்க என்று.. பதறிபோன ஹீரோ அச்சிச்சோ முடியாது கையில் போடுங்க என்று சொல்ல டாக்டர் இல்லை இதை கையில் போடமுடியாது, பின்னாடிதான் போடனும் என்று பிடிவாதம் பிடிக்க அப்ப வேற ஜென்ஸ் டாக்டரை விட்டு போட சொல்லுங்க இல்லை ஊசியே வேண்டாம் என்று சொல்லி பிடிவாதம் பிடிச்சான். கூட வந்த நண்பன் திட்டியும் போடா உடம்பு சரி இல்லை என்றாலும் பரவாயில்லை என்று கிளம்பி வெளியே வந்துட்டான் நம்ம ஹீரோ. கடைசிவரை ஊசி போட்டுக்கவே இல்லை.
சரி இப்ப எதுக்கு இந்த ப்ளாஸ் பேக் என்று கேட்பதிலும் ஒரு நியாயம் இருக்கு, இப்படி ஊசி பின்னாடி போட்டுக்கவே கூச்சப்படும் நம்ம ஹீரோ வாழ்வில் ஒரு புயல் அடிச்சு அவன் கட்டி காத்து வந்த கற்பு காற்றில் பறந்து போச்சு.. எப்படின்னு சொல்றேன் கேளுங்க.

நம்ம ஹீரோவுக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் கூட ஆகவில்லை வேலை விசயமாக மனைவியை விட்டு பிரிஞ்சு இருக்க வேண்டிய சூழ்நிலை, எப்படியும் மனைவியை ஒரு இரண்டு மாசத்தில் அவன் இருக்கும் இடத்துக்கு அழைச்சுக்கிட்டு போய்விடனும் என்ற வெறியோடு கிளம்பி போனான் நம்ம ஹீரோ. போய் ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும் தலைவருக்கு ஒண்ணுக்கு அடிக்கும் பொழுது ஒண்ணுக்கோடு வலியும் கொஞ்சம் இரத்தமும் சேர்ந்து வர ஆரம்பிச்சிட்டு. ஆஹா இதுவரைக்கு ஒழுங்காதானே இருந்துச்சு, மனைவியை அழைச்சிக்கிட்டு வரும் நேரம் பார்த்து இப்படி ஆவுதே என்ற கவலையோடு டாக்டரை பார்க்க போனான் நம்ம ஹீரோ.

அங்க ரிசப்சனில் இருந்த டீவியில் வயசுக்கு வராத பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்ட கவுண்டமணிக்கு செந்தில் ஐடியா கொடுத்து கிரிக்கெட் விளையாட சொல்லி, பால் கரெக்ட்டா பொண்ணோட அப்பா மண்டையை உடைக்காமல் கவுண்டமணியை பதம் பார்க்கவேண்டிய இடத்தில் பதம் பார்த்துவிடும், டாக்டர் ஆப்ரேசன் முடிஞ்சதும் உங்களை காப்பாத்திட்டோம் ஆனா இனி நீங்க தாம்பத்தியம் வெச்சிக்க முடியாது என்று சொல்லுவார், இந்த காமெடியை பார்த்ததும் நம்ம ஹீரோ கொஞ்சம் ஜர்க் ஆனாலும். பயப்படாத மாதிரி உள்ளே போய் டாக்டரை பார்த்தான், எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து வந்ததும் அதை பார்த்த டாக்டர் உங்களுக்கு சிறுநீரக கல் இருக்கு, இந்த பக்கம் கிட்னியில் இரண்டு அந்த பக்கம் இரண்டு இதோ கிட்னிக்கும் பிளாடருக்கும் போகும் பாதையில் ஒன்னு வந்து சிக்கி ஜாம் ஆகி நிக்குது அதான் அது நகரும் பொழுது வலியோடு இரத்தமும் வருகிறது என்றார். அவசரமாக அதை ஆப்ரேசன் செஞ்சு கல்லை உடைக்கனும் என்று டாக்டர் சொல்ல. முதலுக்கு மோசம் வராது என்ற உறுதி மொழியை வாங்கிக்கிட்டு விரைவில் வருகிறேன் என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினான் நம்ம ஹீரோ.

வீட்டுக்கு போய் படுத்ததும் நம்ம ஹீரோவுக்கு பல யோசனை, இந்த ஊரில் இருக்கும் டாக்டருங்ககிட்ட நாம ஒன்னு சொல்லி அது புரியாம அவர் ஒயரிங்கை மாத்தி கொடுத்து ஏதும் சார்ட் சர்கியூட் ஆகி புகைஞ்சு போய்ட்டா என்ன செய்வது? பெட்டர் நம்ம ஊருக்கே போய் ஆப்ரேசன் செஞ்சுக்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி ஊருக்கு வந்து நண்பர்கள் பலர் கைக்காட்டிய டாக்டரிடம் போய் காட்டி அவரும் சீக்கிரம் ஆப்ரேசன் செஞ்சுடுவது நல்லதுன்னு சொன்னதும், சரி என்று அன்றே அட்மிட் ஆகிவிட்டான் நம்ம ஹீரோ.

மறு நாள் காலை 10 மணிக்கு ஆப்புரேசன், இரவில் இருந்து ஏதும் சாப்பிட கூடாது குடிக்க கூடாது என்று எல்லாம் சொன்னாங்க சரின்னு அங்கிருந்த பெட்டில் படுத்து இருந்தான், ஒரு அழகான நர்ஸ் வந்து, சார் எழுதிருங்க ஆப்ரேசனுக்கு பிரிப்பேர் செய்யனும் என்று சொன்னதும் எழுந்தான், என்ன செய்யனும்? உட்காருங்க என்றதும் உட்காந்தான், கண்ணை ஒரு பச்சை துணியால் கட்டியது அந்த நர்ஸ், படுக்க சொன்னுச்சு அந்த நர்ஸ். படுத்ததும். கொஞ்சம் பேண்டை கழட்டுங்க,சட்டை பனியனை தூக்குங்க என்றதும் பதறி எழுந்த நம்ம ஹீரோ எதுக்குன்னு கேட்டான்.

"ஷேவ் செய்யனும்"

"எங்க?"

"அங்க"

"கொடுங்க நான் செஞ்சுக்கிறேன்"

"முடியாது, வயிறில் இருந்து முட்டி கால் வரை சுத்தமா ஷேவ் செய்யனும்"

"முடியாது நானே செஞ்சிக்கிறேன்"

"இல்லை டாக்டர் என்னைதான் திட்டுவார், கண்ணை கட்டிக்கிட்டு படுங்க"

"என்னங்க இது கண்ணை கட்டிக்கிட்டா சரி ஆகிடுமா? அதெல்லாம் முடியாது."

"சொன்னா புரிஞ்சுக்குங்க, இன்னும் ரெண்டு பேசண்டுக்கு பிரிப்பரேசன் செய்யனும் படுங்க"

"அல்லோ நீங்க சொன்னா புரிஞ்சுக்குங்க, முடியாது அட்லீஸ்ட் Male நர்ஸ் இருந்தா அனுப்புங்க"

"அவுங்களுக்கு நைட் டூட்டி கிடையாது காலையில்தான் வருவாங்க"

"அப்ப காலையிலேயே செஞ்சுக்கலாம் நீங்க போங்க"

"முடியாது"

"ஆப்ரேசன் செய்யலைன்னா கூட பரவாயில்லை, நான் ஒத்துக்கமாட்டேன்"

ஹல்லோ டாக்டர் நான் கமலா பேசுறேன், 203 பேசண்ட் பிரிப்பரேசனுக்கு ஒத்துக்கமாட்டேங்கிறார் அடம்பிடிக்கிறார்,ரொம்ப கூச்சப்படுகிறார். நீங்க பேசுங்க... " ஹல்லோ இந்தாங்க டாக்டர் லைனில் இருக்கிறார்.

டாக்டர் நான் லேடி டாக்டரிடம் ஊசி போட்டுக்க கூட கூச்சப்படுவேன், இதுக்கு எல்லாம் ஒத்துக்கமாட்டேன், ஆப்ரேசன் டிலே ஆனாலும் பரவாயில்லை வலியை தாங்கிக்கிறேன். இது நம்ம ஹீரோ

"ஓக்கே ஓக்கே போனை அவுங்க கிட்ட கொடுங்க"

"ஓக்கே டாக்டர், ஓக்கே டாக்டர் சொல்லிடுறேன்....

"என்ன சொன்னார் டாக்டர்?"

"காலையில் வருவாங்க.." படார்ர்ர்ர்ர்ர்ர்ர் கதவு வேகமாக சாத்தப்பட்டது.

காலையில் ஒரு ஆள் வந்து எல்லாம் முடிஞ்ச பிறகு பச்சை கலர் அங்கி நம்ம ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டது, ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிக்கிட்டு போய் மயக்க மருந்து கொடுத்த பிறகு சில பெண் குரல் கேட்டது, தூக்கி வாரி போட்டாலும் நம்ம ஹீரோவால் ஒன்னும் செய்யமுடியவில்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு. ரூமில் கொண்டு வந்து போட்ட பிறகு கொஞ்சம் மயக்கம் தெளிஞ்சு நிமிர்ந்து பார்க்க தலையை தூக்கி பார்க்க முடியவில்லை கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருந்துச்சு, மற்றொரு கையால் என்ன நடந்திருக்கு என்று ஆராய்ந்த பொழுது, டிங்கரிங் பட்டி எல்லாம் பார்த்து அதில் ஒரு விரல் மொத்த பிளாஸ்டிக் டியூப் சொறுவி இருந்தது, ஆஹா அது எங்க போவுதுன்னு பார்த்தா ஒரு பிளாஸ்டிக் பையில் போய் முடிவடைந்தது.
கண்ணில் கண்ணீர் வழிய படுத்திருந்தான் நம்ம ஹீரோ, அவனோட நண்பன் ஏன் டா ரொம்ப வலிக்குதா என்றான். அதுக்கு அவன் இல்லைடா இத்தனை வருசம் பொத்தி வெச்சிருந்த கற்பு காற்றில் பறந்து போய்ட்டுடா, ஆப்ரேசன் தியேட்டரில் யாருன்னே தெரியவில்லை பெண் குரல் கேட்டுச்சுடா. என்று அழுதான். அதுக்கு நண்பன் அதான் நீ அவுங்க மூஞ்சை பார்க்கவில்லையே என்றான்.. அதுக்கு ஹீரோ டேய் அவுங்க மூஞ்சை நான் பார்க்கவில்லை என்றால் என்ன....என்று திட்டிவிட்டு போச்சே போச்சே எல்லாம் போச்சேன்னு படுத்து இருந்தான்.
அப்பொழுது கிளிக் என்று கதவு திறக்கும் சத்தம், வெள்ளை டிரஸில் ஒரு ட்ரேயில் மருந்தோடு வந்த நர்ஸ் எப்படி இருக்கு, வலி இருக்கா? என்று கேட்டுக்கிட்டே வலிக்காத மாதிரி ஒரு ஊசியை போட்டு விட்டு, டக்கென்று பச்சை அங்கியை தூக்கி டியூபை பிடிச்சு பார்த்துவிட்டு, ம்ம்ம் இன்னும் யூரின் கலர் மாறல என்று டியூபை ரெண்டு ஆட்டு ஆட்டிவிட்டு போய்விட்டார்கள். ஹீரோவால் ஒன்னியும் சொல்லமுடியல. அதன் பிறகு போற வர நர்ஸ் எல்லாம் தூக்கி பார்த்து டியூபில் வரும் யூரின் கலரை நோட் செய்வது வழக்கமா போய்விட்டது. தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன ஹீரோ சோகமாக படுத்து கிடந்தான்.

அருகில் இருந்த நண்பனை கூப்பிட்டு மச்சி வரண்டாவில் யாரும் டேபிள் சேர் போட்டுக்கிட்டு உட்காந்து இருக்காங்களா பாரு என்றான். அவனும் ஓடி போய் பார்த்துட்டு இல்லைடா, ஏன் ஏதும் செய்யுதா? நர்ஸை கூப்பிடவா என்றான். அதுக்கு ஹீரோ, இல்லை இல்லை கூப்பிட வேண்டாம் என்னமோ எக்ஸ்பிஸன் நடக்கிறமாதிரி போறவங்க வரவங்க எல்லாம் தூக்கி பார்த்து பிள்ளையார் கோவிலில் மணி அடிப்பது போல் டியூபை ஆட்டுறாங்களே, அதான் வெளியில் யாரும் உட்காந்து டிக்கெட் கொடுத்து அனுப்புறாங்களோன்னு டவுட் என்றான். உனக்கு தையலை கீழே போட்டு இருக்க கூடாது. வாயில் போட்டு இருக்கனும் என்று திட்டிவிட்டு படுத்தான் நண்பன்.

இரண்டாவது நாள் ஒயரிங் எல்லாம் கட் செஞ்சுவிட்டு டாக்டர் நீங்க வீட்டுக்கு போகலாம், ஆனா ஒரு மாசம் "ஒன்னியும் செய்யக்கூடாது". ஊர்ல பாம்பு அடிக்கும் பொழுது தலையை அடிச்சு நசுக்கிட்டாலும் வாலு ஆடும், உயிர் இருக்கு பாருன்னு போட்டு செத்த பாம்பை அடிஅடின்னு அடிப்பாங்க அதுமாதிரி அடிச்சிட்டு பேசுறீங்க பேச்சு, நீங்க சொல்லவில்லை என்றாலும் ஒன்னியும் முடியாது போல டேமேஜ் அப்படி இருக்குன்னு மனசுக்குள் நினைச்சுக்கிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வரும் பொழுது முறைச்சு பார்த்துக்கிட்டே போனது, பிரிப்பரேசன் செய்யவந்து திரும்பி போன நர்ஸ், ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்த்துவிட்டு உன்னை மட்டும் விரட்டி அடிச்சிட்டேனே, நீ விட்ட சாபமா இருக்குமா இல்ல ஏதும் நாயை கல்லால் அடிச்சு பிரிச்சதால் அந்த நாய்விட்ட சாபமா இருக்குமா ஏன் இப்படி என்று யோசனையில் வீட்டுக்கு வந்தான் ஹீரோ.

விவேக் ஒரு படத்தில் பின்னாடி வேஸ்டியை தூக்கி பிடிக்க ஆள் இருப்பது போல் இவன் முன்னாடி கைலியை தூக்கி பிடிச்சுக்கிட்டு சேரில் உட்காந்திருந்தப்ப விசுக் என்று ஒரு கல் பறந்து போய் வேலியில் விழுந்ததும் லொள் லொள் என்று சத்தத்தோடு இரண்டு நாய்கள் பிரிந்து வேறு வேறு பக்கம் ஓட அதை தொரத்திக்கிட்டு ஒரு சிறுவர் கூட்டம் ஓடியது. அந்த பசங்களை நினைச்சு சிரிச்சுக்கிட்டு உட்காந்திருந்தான் நம்ம ஹீரோ.

*************சில வருடங்களுக்கு பிறகு********************
அதன்பிறகு லேடி டாக்டர் ஜென்ஸ் டாக்டர் என்று எல்லாம் பார்ப்பதை விட்டுவிட்டான் நம்ம ஹீரோ.
டாக்டர் ஹல்லோ ஹல்லோ இப்ப எதுக்கு பேண்டை கீழே இறக்குறீங்க இந்த ஊசியை கையிலேயே போட்டுக்கலாம். என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டான் நம்ம ஹீரோ.

ரீ என்ட்ரி டு ஹாஸ்பிடல்....... 
திரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே? திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக! அப்படின்னா என்னா? பேக் போர்சனை காட்டிக்கிட்டா? ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக? இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு!

ஏன் இப்படி ஒரு நிலமை? சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு முன்னாடி, இண்டர்நெட்டில் எல்லாம் ரிசல்ட் பார்க்கும் பழக்கம் வராத காலகட்டத்தில் +12 படிச்சார் நம்ம ஹீரோ. எங்கே படிச்சாரு படிக்கிறமாதிரி நடிச்சார். ஹீரோ ஸ்டேட் பர்ஸ்ட் ரேங் வாங்கனும் பேப்பரில் அவரு போட்டோ வரனும் என்று கனவும் கானும் அம்மா. அந்த அம்மாவின் கனவில் ஒரு லாரி டிப்பர் மண்ணை கொண்டுவந்து கொட்டினார் நம்ம ஹீரோ! எப்படி?

ஹீரோவின் போட்டோ பேப்பரில் வரனும் என்று ஆசைப்பட்டா, நம்ம ஹீரோ அவரோட நம்பரையே பேப்பரில் வராம செஞ்சுட்டார்! எப்படி பார்த்தாலும் நம்ம ஹீரோ நம்பர் பேப்பரில் மிஸ் ஆகியிருக்கு, சரி மாலை பேப்பரில் தான் மிஸ் ஆகிட்டு காலை பேப்பரிலாவது வந்திடும் என்று நினைச்சா அதிலும் மிஸ் ஆயிட்டு, ஹீரோ பெயில் ஆன விசயம் ஊர் முழுக்க தெரிஞ்சு போச்சு, நம்ம ஹீரோவை யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் நம்ம ஹீரோவுக்கு சேம் சேம் பப்பி சேம்மா போச்சு...அப்படியே கொல்லை பக்கம் போனவரு வயலுக்கு அடிக்க வெச்சிருந்த டெமக்ரானையும் இன்னொரு மருந்தையும் மிக்ஸ் செஞ்சு கருமாந்திரமா இருந்த அந்த கலவைய மூக்க பொத்திக்கிட்டு ஒரே கல்பா குடிச்சிட்டு சமத்து புள்ளையா போய் அவுங்க சித்தப்பா வீட்டில் உட்காந்துக்கிட்டார்.அவுங்க எல்லாம் பெயில் ஆன கவலைய காட்டிக்காம ஹீரோவை தேத்துவதிலேயே குறியா இருந்தாங்க, டக்குன்னு பூச்சி மருந்து ஸ்மெல் அடிச்சதை சித்தப்பா மோப்பம் புடிச்சு, ரெண்டு அறை விட்டு வண்டியில் தூக்கி முன்னாடி வெச்சிக்கிட்டு கொண்டு போய் போட்டாரு அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில், ஹீரோவுக்கு கொஞ்சம் கொஞ்சமா எங்கேயோ மிதக்கிற மாதிரி இருந்துச்சு, ஒரு பக்கெட்டில் உப்பை கொட்டி கரைச்சு வாயில் ஊத்தவந்தா ஹீரோ வாயை திறக்க மாட்டேங்கிறார்.

இது சரியாவராதுன்னு டாக்டர் ஒரு புனலில் டியூப் கனெக்ட் செஞ்சமாதிரியும் அதில் ஒரு மரக்கட்டையும் இருந்ததை ஹீரோ வாயில் உட்டு அதில் உப்பு கரைசலை ஊத்தி வாந்தி எடுன்னா, ஹீரோ என்ன மாசமாவா இருக்கிறார் வாந்தி எடுக்க? ஹீரோவுக்கு வாமிட் வரல. டாக்டர் அந்த புனலை அப்படியோ ஒரு சுத்து சுத்தினா அடியிறு வரை போய் நின்ன டியூப் அப்படியே உள்ளே ஒரு சுத்து சுத்தி பிரட்டிக்கிட்டு வாமிட் வந்துச்சு திரும்ப உடுடாங்கடா அந்த டீயுபை, திரும்ப ஊத்துங்கடா அந்த உப்பு கரைசலைன்னு விளையாடிக்கிட்டு இருக்காங்க, ஹீரோ குடம் குடமா வெளியில் எடுக்கும் உப்பு கரைசலை புடிச்சு மோந்து பார்த்துட்டு இன்னும் பூச்சி மருந்து ஸ்மெல் இருக்கு இருக்குன்னு அந்த ஸ்மெல் இல்லாம தண்ணி வரும் வரை இந்த விளையாட்டு நடந்துச்சு.

அப்புறம் என்ன என்னமோ செஞ்சு ஹீரோவை டயர்ட் ஆக்கி கொண்டு போய் படுக்கையில் போட்டுவிட்டார்கள். மயக்கம் எல்லாம் தெளிஞ்சு கண் முழிச்சு பார்த்தா ஹாஸ்பிட்டல் முழுவது ஊர் சனங்க மற்றும் சொந்தகாரனுங்க கவலையோட நிக்கிறாய்ங்க. ஹீரோ பிழைச்சதுக்காகயா இல்லை இப்படி செஞ்சதுக்காகயா என்று தெரியாம ஹீரோ அப்படியோ தூங்க ஆரம்பிக்கிறார்.

வீட்டுக்கு போனாலும் சாப்பாடு எல்லாம் கிடையாது எது குடிச்சாலும் தொண்டையில் இருந்து வயிறு வரை ஒரே எரிச்சல், அடபாவிங்களா இனி எத்தனை சப்ஜெக்டில் பெயில் ஆனாலும் பூச்சிமருந்தை மட்டும் குடிக்கமாட்டேன் டா என்ற சபதத்தோடு ஊரை விட்டு போய் ஒருவருடம் அவரோட மாமாவீட்டில் இருந்து படிச்சி பாஸ் ஆகி காலேஜில் சேர்ந்தபிறகுதான் ஊர் பக்கமே வந்தார்.. அதன் பிறகு சக்கையா படிச்சு ஹீரோ காலேஜ் படிப்பை முடிச்சார்.

பெயில் ஆனவன் இனி என்ன படிச்சு உருப்பட போறான் என்று நினைச்சவங்க எல்லாம் ஊரில் அவனை நல்லபடியா உதாரணமாக காட்டும் அளவுக்கு கஷ்டப்பட்டு முன்னேறி இன்னைக்கு ஒரு வெளிநாட்டு கம்பெனியில் கேரளா குஜிலிங்களுக்கு மேனேஜரா இருக்கார். 7G ரெயிண்போ காலனியில் ஹீரோவிடம் உனக்குன்னு ஒரு தனி திறமை இருக்கும் அதை கொண்டுவந்து நீ பெரிய ஆளா ஆகனும் என்று சொன்ன ஹீரோயினையே லவ்ஸ் & டூயட் எல்லாம் பாடி ஒரு பெரும் போராட்டத்துக்கு பிறகு கல்யாணமும் செஞ்சு இப்ப ஜாலியா இருக்கார் ஹீரோ, அப்ப அப்ப +12 ரிசல்ட் வரும் பொழுது மட்டும் இந்த ப்ளாஸ் பேக் அவருக்கு நினைவுக்கு வந்துட்டு போகும்.

நொட்ட நீதி: பெயில் ஆனால் தான் இப்படி டேமேஜர் ஆக முடியும்:))

நல்ல நீதி: தோல்வியினால் எதுவும் முடிந்துவிடுவது இல்லை...

~~குசும்பு~~

The Avengers

ஒரு படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவளவு தெளிவா யாரும் விமர்சனம் எழுத முடியாதுன்னு நினைக்குறேன் ... படத்தோட ஒவ்வொரு கதாபாத்திரத பத்தியும் தெளிவா எழுதி இருக்காரு ....படமும் பட்டைய கிளப்புது ....







அடுத்த வாரம் Avengers படம் வெளியாகிறது. அதில் இடம் பெற்றிருப்பவர்கள் யார்? இந்த கும்பல் ஏன் அவெஞ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள்? இவர்கள் எப்படி உருவானார்கள்? இதுபோன்ற சில விஷயங்களை ஓரிரு கட்டுரைகளில் பார்த்துவிடுவதே நோக்கம். இந்தக் கட்டுரைகளைப் படித்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால், படம் பார்க்கும் அனுபவம் இன்னமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். மட்டுமல்லாமல், இந்தப் படத்தின் கதாநாயகர்கள் நடித்த படங்களைத் தவறாமல் பார்த்தும் வந்திருக்கிறேன். ஆகையால், இந்தக் கட்டுரைகள் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன். அடுத்த வாரம் Avengers திரைப்படம் வெளியாகும்போது இந்த மினி கட்டுரைத்தொடர் முடிவடைந்துவிடும்.




ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை துவங்குகிறது. 1922ல் ந்யூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 89 வயது ஆகியும், உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். ஸ்பைடர் மேன், X Men, Fantastic Four, Daredevil ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கிய மனிதர் இவர். காமிக்ஸ் பிதாமகர் என்று இன்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் - ஸ்டான் லீ.

முப்பதுகளில், ஹாலிவுட்டில், எர்ரால் ஃப்ளின் என்ற நபர் படுபாப்புலராக இருந்தவர். எம்ஜியாரின் முன்னோடி என்றே இவரைச் சொல்லலாம். கத்திச்சண்டைகளில் கைதேர்ந்தவர். அக்காலப் படங்களில் ராபின்ஹூட்டாக நடித்துப் புகழ்பெற்றவர். இவரது படங்கள் என்றால் சிறுவன் ஸ்டான் லீக்கு உயிர். இவரது படங்களைப் பார்த்து, ஃபாண்டஸி உலகில் மிதந்தான் குட்டி ஸ்டான் லீ. அக்காலகட்டத்தில் அவனிடம் யாராவது அவனது வாழ்க்கை லட்சியத்தைப் பற்றிக் கேள்வி கேட்டிருந்தால், இதே போன்று படங்கள் எடுக்க வேண்டும்; அல்லது நாவல்கள் எழுத வேண்டும் என்றே சொல்லியிருப்பான். அவனது இந்த ஆசையை, பெரியவன் ஆனபிற்பாடும் அணையாது பாதுகாத்து வந்தான்.

பள்ளியை முடித்த பதினாறரை வயது ஸ்டான் லீ, 'டைம்லி காமிக்ஸ்' என்ற அலுவலகத்தில், ஆஃபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தான். அக்காலத்தில் - 1939ல் - காமிக்ஸ் வரையும் ஆர்டிஸ்ட்கள், இங்க் புட்டிகளில் பேனாக்களை அவ்வப்போது தோய்த்தே படங்கள் வரைவது வழக்கம். அந்த இங்க் புட்டிகளை நிரப்புவது இளைஞன் ஸ்டான் லீயின் பிரதான வேலையாக இருந்தது. கூடவே, ஆர்டிஸ்ட்களுக்கு உணவு வாங்கி வருவது, அவர்களது பென்ஸில் ஆர்ட்வொர்க்கை  முடிந்துவிட்ட பிரதிகளிலிருந்து அழிப்பது, அவ்வப்போது ப்ரூஃப் பார்ப்பது ஆகியவையும் அவனது வேலைகளாக இருந்தன.

'Filler' என்ற பதம், காமிக்ஸ் உலகில் வெகு சாதாரணமாக அடிபடும் ஒன்று. அதாவது, குறிப்பிட்ட ஆர்டிஸ்டோ அல்லது கதை எழுதுபவரோ, வேலையை முடித்த பின்னர், சில சமயம், காமிக்ஸின் ஓரிரு பக்கங்களோ அல்லது அதற்கு மேலோ, பக்கங்களை நிரப்புவதற்கு மேலும் மெடீரியல் தேவைப்படும். அப்போது யாரையாவது அழைத்து அந்தப் பக்கங்களை நிரப்பச் சொல்வது வழக்கம் (நமது லயன் காமிக்ஸில் அவ்வப்போது தலைகாட்டும் ரிப் கிர்பி கதைகள் இந்த ரகமே. மெயின் கதை முடிந்தபின்னர் ரிப் கிர்பி கதைகள் அந்தக் காமிக்ஸில் இருப்பதை எத்தனை முறை கண்டிருக்கிறோம்?). அப்படி ஒரு வாய்ப்பு, ஸ்டான் லீக்கு, அவரது 19வது வயதில் கிடைத்தது. அவரது துறுதுறுப்பைப் பார்த்த நிர்வாகிகள், 'Captain America Foils the Traitor’s Revenge' என்ற சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர். இந்தக் கதை, மே மாதம் 1941ல், கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் கதை # 3றாக வெளிவந்த காமிக்ஸில் இருக்கிறது. கிடைத்த மிகச்சிறு வாய்ப்பை அட்டகாசமாக உபயோகித்துக்கொண்டார் லீ. எப்படியென்றால், பின்னாளில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தின் மிக முக்கிய மூவ் - தனது கேடயத்தை எதிரிகளை நோக்கி வீசி, அது அவர்களைத் தாக்கிய பின்னர் திரும்ப இவரிடமே வந்து சேர்வது - ஸ்டான் லீயாலேயே உருவாக்கப்பட்டது. அவரது சிறிய ஃபில்லர் கதையில். அந்த மூவ், பல ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது (லீயின் பதினெட்டரையாவது வயது).

இதன்பின் வெகுசீக்கிரமே, அடுத்த மூன்றே மாதங்களில், மெயின் காமிக்ஸ் உலகில் நுழைந்தார் லீ. 'டெஸ்ட்ராயர்' (Destroyer) என்ற கதாபாத்திரத்தை 1941 ஆகஸ்டில் உருவாக்கினார். அதே மாதத்தில், 'ஜாக் ஃப்ராஸ்ட்' (Jack Frost) மற்றும் 'ஃபாதர் டைம்' (Father Time) ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் படைத்து, காமிக்ஸ் உலகில் நடமாட விட்டார் லீ.

ஸ்டான் லீ என்ற மனிதனை, காமிக்ஸ் ரசிகர்கள் புரிந்துகொண்ட காலகட்டம் உருவானது அப்போதுதான்.

அதே வருடத்தில் (1941), லீயின் வேகத்தைப் பார்த்து பிரமித்துப்போன டைம்லி காமிக்ஸ் நிறுவனர் மார்ட்டின் குட்மேன், இடைக்கால எடிட்டராக பதினெட்டரை வயது லீயை நியமித்தார் (அப்போது குட்மேனுக்கு வயது முப்பது). வேலைக்குச் சேர்ந்த இரண்டே வருடங்களில், அந்தப் பிரிவுக்கு எடிட்டராக லீ மாறியதற்கு அவரது உழைப்பு மட்டுமல்லாது, அப்போதைய எடிட்டர் குட்மேனுடன் சண்டையிட்டுப் பிரிந்ததும் ஒரு காரணம். ஆக, உழைப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் லீயைப் பார்த்துப் புன்னகைக்கத் துவங்கியிருந்தன.

இதன்பின் லீ திரும்பியே பார்க்கவில்லை (படுபயங்கர க்ளிஷேடான ஒரு வாக்கியம் இது). இடையே சில வருடங்கள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, திரும்பி வந்த வேகத்தில் பல்வேறு வகையான கதைகளை எழுதிக் குவித்தார் லீ. 1947ல் திருமணம். அந்தக் காலகட்டத்தில், டைம்லி காமிக்ஸ் நிறுவனம், அட்லஸ் காமிக்ஸ் என்று பெயர் மாற்றம் அடைந்தது. 1950களில், அதுவரை சரமாரியாகக் கதைகளை எழுதிவந்த லீ, ஒரே போன்று சென்றுகொண்டிருந்த வாழ்க்கையினால் அலுப்படைந்தார். பணத்துக்கு எந்தக் குறைவுமில்லாமல் இருந்தாலும், எத்தனை காலம்தான் சண்டை, வெஸ்டர்ன்ஸ், வில்லன்கள், ஹீரோக்கள் ஆகியவர்களால் ஆன உலகத்தில் உழல்வது? ஆகவே, வேலையை விட்டுவிட்டு, வேறு ஏதாவது வேலையில் ஈடுபடலாம் என்பது லீயின் முடிவாக இருந்தது.

அப்போதுதான் விதி லீயைப் பார்த்து மறுபடியும் புன்னகைத்தது (இதுவும் மற்றொரு க்ளிஷே தான்).



வருடம் - 1956. அமெரிக்காவின் புகழ்பெற்ற DC காமிக்ஸ் நிறுவனம், ஃப்ளாஷ் (Flash) என்ற ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை தூசிதட்டி எடுத்து உலவ விட்டிருந்த காலம். அந்த சீரீஸ் நன்றாகவே வெற்றியடைந்ததால், உடனேயே 'ஜஸ்டிஸ் லீக்' (Justice League) வெளியே விடப்பட்டது. அதுவும் வெற்றியடைந்தது. அப்போதுதான் லீயின் திறமை பற்றி நன்றாகத் தெரிந்துவைத்திருந்த குட்மேன், லீயிடம் வந்து, போட்டி நிறுவனமான DC காமிக்ஸுக்கு சவால் விடும்வகையில் ஏதாவது ஒரு சூப்பர்ஹீரோ கும்பலை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். லீக்கு அதில் இஷ்டமில்லை. வேலையையே விட்டுவிடும் முடிவுக்கு அவர் வந்திருந்தார். அப்போது, அவரது மனைவி Joanன் வற்புறுத்தலுக்கு இணங்கி, ஒருமுறை எதையாவது செய்துபார்ப்போமே என்று அவர் உருவாக்கிய ஹீரோ கும்பலின் பெயர் - Fantastic Four.

ஏனோதானோவென்று அமர்ந்தாலும், இந்த ஹீரோக்களின் படைப்பில் லீ செய்த மாற்றம் ஒன்று இன்றளவும் பல ஹீரோக்களின் உருவாக்கத்தில் உதவி செய்துள்ளது. அந்தக் காலகட்டம் வரை, சூப்பர் ஹீரோ என்றால் நிஜமாகவே ஹீரோதான். அதாவது, அந்த ஹீரோவிடம் எந்தக் குறையும் இருக்காது. நல்லவனாக, அபரிமிதமான சக்தியுடன், அடக்கமானவனாக, மக்களை வில்லனிடமிருந்து காப்பவனே அபோதைய சூப்பர் ஹீரோ. உதாரணத்துக்கு: சூப்பர்மேன் மற்றும் கேப்டன் அமெரிக்கா. ஆனால், வில்லனை அடி பின்னியபின் ஹீரோ என்ன செய்வான்? இங்குதான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்தது. லீயின் ஹீரோக்கள், தங்களின் சக்திகளைப் பற்றி ஜம்பம் அடித்தனர். தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்குப் பணம் சம்பாதிப்பது எப்படி என்று யோசித்தனர். ஹீரோயின்களை எப்படி மடக்குவது என்று சிந்தித்தனர். தங்களுக்குள்ளேயே ஈகோ மிகுந்து அடித்துக்கொண்டனர். நோய்வாய்ப்பட்டனர்.

இந்த Fantastic Four கதாபாத்திரங்களைப் படமாக வரைந்தவர் புகழ்பெற்ற ஆர்டிஸ்ட் ஜாக் கிர்பி.

வெளிவந்தவுடன், அட்டகாச ஹிட்டாக மாறியது இந்த சீரீஸ். பயங்கர நல்லவர்களாக இல்லாமல், சாதாரண மனிதர்களாக இருந்த இந்தக் கதாபாத்திரங்கள், காமிக்ஸ் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தன. அக்காலகட்டம் வரை (1956), அமெரிக்க காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கியது, DC காமிக்ஸ் நிறுவனம்தான். ஆனால், தொடர்ந்து ஸ்டீரியோடைப் நல்ல ஹீரோக்களையே உற்பத்தி செய்துவந்ததால், அந்நிறுவனம் ஒருவித மந்தநிலையில் விளங்கிவந்த நேரத்தில், லீயின் கதாபாத்திரங்கள் புயலைப் போல் காமிக்ஸ் மார்க்கெட்டில் நுழைந்தன. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றன.

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழலாம். DC காமிக்ஸ் என்றாலே டக்கென்று நினைவு வருவது Batman ஆயிற்றே? பேட்மேன் கூடவா DC காமிக்ஸை காப்பாற்ற முடியவில்லை?


பேட்மேன், பாப் கேனால் 1939லேயே உருவாக்கப்பட்டு, ஐம்பதுகளில் இன்றியமையாத ஒரு கதாபாத்திரமாக இருந்துவந்தது. ஆனால், இந்தக் காலகட்டத்தில், தொடர்ந்து ராபினோடு சேர்ந்து பேட்மேன் செய்த சாகசங்களால், பேட்மேனும் ராபினும் gayக்கள் என்று ரசிகர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிடும் அளவு அந்தக் காமிக்ஸ் மாறிவிட்டிருந்தது. ஆகையால், Batwoman(1956) போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, இந்த இமேஜை மாற்றுவதற்காக எத்தனம் செய்யப்பட்டுவந்த காலம் அது. என்ன செய்தாலும், பேட்மேனின் வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. இந்த வீழ்ச்சி, 1986ல், ஃப்ராங்க் மில்லர் 'The Dark Knight Returns'வெளியிட்டபின்னர்தான் மாறியது. அது வேறு கதை. இப்போது வேண்டாம்.



ஆக, ஸ்டான் லீ ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் காமிக்ஸ் உலகில் முடிசூடா மன்னராக விளங்கினார் என்பது வரலாறு. அப்போது லீ செய்த இன்னொரு காரியம், காமிக்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பிற கலைஞர்கள் இவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கவும் காரணமாக இருந்தது. காமிக்ஸ் தயாரிக்கும்போது எழுத்தாளர், ஆர்டிஸ்ட்  ஆகிய இருவர் மட்டுமல்லாது, வண்ண இங்க்களைப் பதிப்பவர், லெட்டரர் எனப்படும் எழுத்துக்களை ஒழுங்குபடுத்தி வசன பலூனுக்குள் பொருத்துபவர் ஆகியவர்களின் உழைப்பும் சம அளவில் இருந்துவந்தது. ஆனால், ஐம்பதுகளின் இறுதிவரை, வசனகர்த்தா மற்றும் ஆர்டிஸ்ட் ஆகியவர்களின் விபரங்களே காமிக்ஸின் creditsல் வெளியிடப்பட்டு வந்தன. இந்த முறையை மாற்றி, Creditsகளில் இங்க்கர் மற்றும் லெட்டரர்களின் விபரங்களும் இடம்பெறுமாறு செய்தார் ஸ்டான் லீ. இது மட்டுமல்லாது, மார்வெலின் (ஆம். 1961ல், அட்லஸ் காமிக்ஸ் என்பது மார்வெல் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது) நிர்வாகக் குழுமத்தில் நடைபெறும் மீட்டிங்குகள், இனிவரப்போகும் கதைகளின் ட்ரெய்லர்கள் ஆகியவைகளையும் காமிக்ஸ்களில் இடம்பெறச் செய்தார் லீ. இது, அப்போதைய காலகட்டத்தில் ஒரு வெல்கம் சேஞ்சாக அமைந்தது.

லயனின் 'ஹாட்லைன்' போல, ஸ்டான் லீயின் பத்தி, ஒவ்வொரு காமிக்ஸிலும் இடம்பெற்றது. அதன் பெயர்: Stan's Soapbox. அந்தக் காலகட்டத்தில், தனது வேலைப்பளுவின் காரணமாக, பழைய காமிக்ஸ் தயாரிப்பு முறை ஒன்றை தூசிதட்டி எடுத்தார் லீ. அதன் பாப்புலாரிட்டி காரணமாக, 'Marvel Method' என்றே புகழடைந்தது அந்த முறை. ஒவ்வொரு காமிக்ஸ் தயாரிப்பின்போதும், ஆர்டிஸ்டுடன் ஒரு மீட்டிங் போடுவார் லீ. அந்த மீட்டிங்கில், கதையின் ஒன்லைன் ரெடியாகிவிடும். கூடவே, கதையின் பிரதான சம்பவங்களும் (Plot Points??). இதன்பின், ஆர்டிஸ்ட் விரிவாக படங்களை வரைந்து லீக்கு அனுப்புவார் (storyboards). அதன்பின் லீ டயலாக் எழுதுவார். கூடவே, ஆர்டிஸ்டின் படங்களிலும் சில திருத்தங்கள் சொல்லுவார். அதன்பின் காமிக்ஸ் கடைசியாக ரெடியாகும். இதன்மூலம், ஆர்டிஸ்ட்களும் காமிக்ஸ் தயாரிப்பில் நேரடிப் பங்கு பெற்றனர் (இதனால், ஸ்பைடர்மேன் மற்றும் Fantastic Four திரைப்படங்களில், இணை உருவாக்கம் என்றுதான் லீயின் பெயர் இருக்கும். இவரோடு திரையில் இணை உருவாக்க Credits பெற்றது அப்போதைய காமிக்ஸ் ஓவியங்களை வரைந்த ஜாக் கிர்பி மற்றும் ஸ்டீவ் டிட்கோ).



இந்த முறையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாதபோதும், மிக மிக ஆச்சரியகரமாக, பீட்டர் ஜாக்ஸன், 'லார்ட் ஆஃப் த ரிங்ஸ்' படங்களை அச்சாக இதே முறையில்தான் உருவாக்கினார் என்பது ஆச்சரியகரமான தகவல்தானே?



இதன்பின் லீயின் வளர்ச்சி அபரிமிதமான ஒன்று. மார்வெல் காமிக்ஸின் தலைமைப் பொறுப்பிலும் அமர்ந்தார் லீ. மார்வெல் என்றாலே லீதான் ரசிகர்களுக்கு நினைவு வந்த அளவு பாப்புலர் ஆனார்.


தற்போது வாழ்க்கையை என்ஜாய் செய்துகொண்டிருக்கும் இந்த எண்பத்தொன்பது வயது கிழவர், இப்போதும் பல காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு கடவுள் ஸ்தானத்தில் இருந்து வருகிறார். பல படங்களிலும் ஜாலியாக முகத்தைக் காட்டி கௌரவ வேடங்களில் நடித்தும் இருக்கிறார் லீ.

சரி. லீக்கும் Avengersக்கும் என்னய்யா சம்மந்தம் என்று கேட்பவரா நீங்கள்? பொறுமை அவசியம் நண்பரே...









கும்பல் கும்பலாக சேர்ந்து சண்டையிடும் சூப்பர் ஹீரோக்களைப் பற்றிய craze காமிக்ஸ் ரசிகர்களிடையே பெருக ஆரம்பித்தது (ஆல்ரெடி DC காமிக்ஸ், ஜஸ்டிஸ் லீக்கினால் இந்த நெருப்பில் நெய் வார்த்திருந்தது). அதற்கு சரியான வகையில் தீனிபோடும் திறமையும் ஸ்டான் லீயிடம் அபரிமிதமாக இருந்தது. ஆகவே, இந்த சீரீஸை உருவாக்கியபின், சரமாரியாக புதுப்புது கதாபாத்திரங்களை உருவாக்க ஆரம்பித்தார் லீ. அவற்றில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இன்றளவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதை கவனித்தால், அவரது புத்திசாலித்தனம் புரியும்.


1962. பனிப்போரின் உச்சகட்டம். ஒரு புதிய காமிக்ஸ் கதாபாத்திரத்தை ஸ்ருஷ்டிக்க விரும்பினார் லீ. எப்படிப்பட்ட கதாபாத்திரம்? அவரே சொல்கிறார் கேட்போம்.

“எப்போது வேண்டுமானாலும் ந்யூக்ளியர் குண்டுகள் வீசப்படலாம் என்ற சூழல். இந்தப் பயம் மட்டுமல்லாது, அணு ஆயுதங்களால் பல ஆபத்தான உயிரினங்கள் உருவாக்கப்படலாம் என்றும் மக்கள் நம்பிக்கொண்டிருந்த காலம். அந்த நேரத்தில் அப்படிப்பட்ட ஒரு மான்ஸ்டரை உருவாக்க விரும்பினேன். இந்த பூதத்தை உருவாக்குவதற்காக எனக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது, Dr Jeykill & Mr. Hyde கதாபாத்திரம் (பள்ளி நாட்களில் ஆங்கிலத் துணைப்பாடமாக அமைந்த இந்தக் கதையைப் பலர் படித்திருக்கலாம். சுருக்கமாக: பகலில் மருத்துவர். இரவில் பூதம்). கூடவே, நாற்பதுகளில் அமெரிக்கத் திரைப்படங்களின் டார்லிங்காக விளங்கிய ஃப்ராங்கென்ஸ்டைன் கதாபாத்திரம். இந்த இரண்டு கதாபாத்திரங்களைக் கலந்தே நான் உருவாக்க விரும்பிய பூதத்தை உருவாக்கினேன். ஆனால், அந்த பூதம் கெட்ட பூதம் அல்ல. அது பாட்டுக்கு அதன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கும். அதனைச் சுற்றியுள்ள மனிதர்கள் இந்தப் பூதத்தைப் பார்த்து பயந்து, இதனை ஆத்திரப்படுத்தும்போது அதன் சக்தி அதிகரித்து, பேரழிவை அப்பூதம் உருவாக்கும்”.

அப்படி மே மாதம் 1962ல் உருவாக்கப்பட்டு அறிமுகமான கதாபாத்திரம் தான் 'The Incredible Hulk'. முதன்முதலில் அறிமுகமான காமிக்ஸ் அட்டையைக் கவனித்தால், தத்ரூபமாக ஃப்ராங்கென்ஸ்டைன் போலவே ஹல்க்கின் முகம் இருப்பதைக் காண முடியும். மட்டுமல்லாது, ஹல்க்கின் நிறம், சாம்பல் நிறமாக இருக்கும். அதுதான் ஹல்க்கின் ஒரிஜினல் நிறம். பச்சை வண்ணம், பின்னர் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.

The Incredible Hulk original comics cover 1962


1963ல், ஹல்க் கதாபாத்திரம், Fantastic Four கதைகளில் கௌரவ வேடத்துடன் இடம்பெற்றது. அந்தக் காலகட்டத்தில், ஹல்க் கதைகளுக்குப் படம் வரைபவரான ஜாக் கிர்பிக்கு ஒரு கல்லூரியிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. தங்கள் கல்லூரியின் டார்மிட்டரிக்கு ஹல்க்கின் படத்தையே வைத்து ஒரு சின்னம் உருவாக்கியிருப்பதாக. அப்போதுதான், ஹல்க், கல்லூரி மாணவ மாணவியரிடையே பிரபலமாக இருந்தது ஸ்டான் லீக்குத் தெரியவந்தது.

இதன்பின்னர் பல ஹல்க் கதைகள் வெளிவந்துவிட்டன. இக்கதைகளை மையமாக வைத்து, 2003ல்,The Hulk என்ற படமும், 2008ல் The Incredible Hulk என்ற படமும் வெளிவந்தும்விட்டன (இப்படங்களைப் பற்றி, அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய இனிவரும் கட்டுரையில் விபரமாகப் பார்க்கலாம்).

ஹல்க் எப்படி உருவாகியது?

ஒரு விஞ்ஞானப் பரிசோதனையின்போது, ஒரு குறிப்பிட்ட கதிரியக்கத்திலிருந்து ஒரு குழந்தையைக் காப்பாற்றுகையில், அந்தக் கதிரியக்கத்துக்கு முழுமையாக ஆட்பட்டுவிடுகிறார் விஞ்ஞானி ப்ரூஸ் பேன்னர் (Bruce Banner). உடனடியாக மயக்கமும் அடைந்துவிடுகிறார். அன்று இரவு, ராணுவ முகாமிலிருந்து பிரம்மாண்டமான சாம்பல் நிற ஜந்து ஒன்று சுவரைத் தாண்டிக் குதித்து ஓடுகிறது. விஞ்ஞானி பேன்னர்ஸையும் காணவில்லை. அதன்பின்னர்தான் அதிகாரிகளுக்கு உண்மை புரிகிறது. ப்ரூஸ் தேடப்படுகிறார். இதனை மையமாக வைத்தே ஹல்க் கதைகள் உருவாக்கப்பட்டன.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், அக்கதாபாத்திரத்தின் பிரதான எதிரி ஒருவன் இருப்பான். எதிரி என்று எடுத்துக்கொண்டால், பலபேர் பல காமிக்ஸ்களில் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள், பெரிய வில்லன் ஒருவன் இருந்தே தீருவான். அப்படிப்பட்ட மெயின் வில்லன், இந்த ஹீரோவுடன் எப்படியெல்லாம் மோதுகிறான் என்பதைவைத்து கதையின் சுவாரஸ்யம் அதிகரிக்கும் இல்லையா? அப்படி ஹல்க்கின் பிறவி எதிரி யாரென்றால், ஜெனரல் தாட்டியஸ் ‘தண்டர்போல்ட்’ ராஸ் (Thaddeus 'Thunderbolt' Ross) என்ற ராணுவ அதிகாரி. 'The Incredible Hulk' படத்தின் கடைசியில், அதிபயங்கர ஜந்துவாக மாறி ஹல்க்குடன் மோதுவாரே, அதே கதாபாத்திரம்தான் இந்த ராஸ். (திருத்தம்:23rd Apr 2012: உண்மையில், திரைப்படத்தில், எமில் ப்ளான்ஸ்கி என்ற ராணுவ வீரன் தான் க்ளைமாக்ஸில் அபாமிநேஷன் என்ற பெரிய உருவத்தில் ஹல்க்குடன் மோதுவான். திருத்தத்தை, பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டிய நண்பர் இரா.தீபக்குக்கு நன்றி). இவரைத்தவிர, பல்வேறு சைடு வில்லன்களும் ஹல்க்கின் கதைகளில் உண்டு.

ஹல்க்கின் கோபம் வளரவளர, அவனது பூதாகாரமான தோற்றம் வெளிப்படும். ஆரம்பகால காமிக்ஸ்களில், ப்ரூஸ் பேன்னரிடம் ஒரு கருவி இருந்தது. அக்கருவியின் மூலமாகத் தனது பூத உருவை அவர் எடுப்பார். பிந்நாட்களில் அக்கருவி மறைந்து, கோபத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறை அறிமுகமானது.


ஆகஸ்ட் 1962. ஏற்கெனவே ஹல்க்கை உருவாக்கிய லீ, இன்னொரு புதிய ஹீரோவை உருவாக்க நினைத்தார். இம்முறையும், லீயே இந்தப் புதிய கதாபாத்திரத்தைப் பற்றி விளக்குகிறார்:

”இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் உலகின் அதிபயங்கர பலசாலியை (ஹல்க்) உருவாக்கியிருந்தேன். இப்போது, இன்னொரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கவேண்டும் என்று நினைத்தபோது, இந்தப் பலசாலியை விட பலமுள்ளவனாக எப்படி ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்று யோசித்தேன். மிகவும் எளிய வழி தோன்றியது. அதாவது, மனிதனாக அக்கதாபாத்திரம் இருக்கக்கூடாது என்று முடிவுசெய்தேன். மனிதனாக இருக்கக்கூடாது என்றால், அவன் ஒரு கடவுளாக இருத்தல் மட்டுமே சரியானதொரு வழியாகத் தோன்றியது. கடவுள் என்றால், எந்தக் கடவுள்? கிரேக்க மற்றும் ரோமன் கடவுளர்களைப் பற்றி மக்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஆகையால், மக்களுக்கு அதிகம் தெரியாத நோர்ஸ் கடவுலர்களைப் பற்றி ஆராய்ந்தேன். நோர்ஸ் கடவுளர்கள், வைக்கிங்குகளைப் போல் இறக்கை வைத்த கிரீடம், பெரிய தாடி, ஆயுதமாக சுத்தியல் ஆகியவற்றை வைத்துக்கொண்டிருந்ததை அவதானித்தேன். இப்படி அவதரித்த கதாபாத்திரம் தான் தோர் (Thor)".


Thor original comics cover 1962


தோர் என்ற இந்தக் கதாபாத்திரத்தின் ஒரிஜினல் இடம், ‘அஸ்கார்ட்’ (Asgard) என்ற கிரகம். அந்தக் கிரகத்தில், ‘ஓடின்’ (Odin) என்ற தலைவரின் மகனே தோர். தோருக்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ‘லோகி’ (Loki). தோர் மிகவும் கர்வமுள்ளவனாக இருந்ததால், அவனுக்குப் பணிவைக் கற்றுக்கொடுக்க விரும்பி, ஓடின், பூமியில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனான ‘டொனால்ட் ப்ளேக்’ என்பவனின் உடலில் தோரின் நினைவுகளை அழித்து, புகுத்திவிடுகிறார். அப்போது எதேச்சையாகத் தன்னைத் துரத்தும் சில ஏலியன்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஓடும் ப்ளேக்கின் கையில் கிடைக்கிறது, தோரின் ஆயுதமான சுத்தியல். இந்த சுத்தியலின் பெயர், ‘மயோல்நிர்’ (Mjolnir). இந்த ஆயுதம் கிடைத்ததும், ப்ளேக்குக்கு சுயநினைவு வந்துவிடுகிறது. ஏலியன்களை அடி துவம்சம் செய்கிறார் தோர். அதன்பின், சூப்பர்மேன் போல, பல நேரங்களில் சாதுவான மனிதன் போலவும், பூமிக்கு ஆபத்து நேர்கையில் தோராகவும் அவதரித்துக்கொண்டிருக்கிறார் தோர்.

தோரின் பிரதான எதிரி, தோரின் அண்ணன் லோகி. இதைப்பற்றியும், சென்ற வருடம் வெளிவந்தThor(2011) திரைப்படத்தைப் பற்றியும், இதோ என்னுடைய பழைய கட்டுரை.

அதிபயங்கர பலமே தோரின் ப்ளஸ் பாயிண்ட். கூடவே, அவனது சுத்தியல். அளவுக்குமீறி ஆத்திரப்படுத்திவிட்டால், தோர் வெறித்தனமாக எதிரில் இருப்பவர்களைக் கண்மூடித்தனமாக தாக்கத் துவங்கிவிடுவான். அப்போது அது நண்பர்களா எதிரிகளா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது.


ஆண்டு 1963. ஹல்க் மற்றும் தோர் காமிஸ்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்த நேரம். ஸ்டான் லீதான் ஒரே வேலையை திரும்பத்திரும்ப செக்குமாடு போல் செய்பவர் அல்லவே? எதிலுமே ஒரு வெரைட்டி தேவைப்படும் ஆளாயிற்றே? ஆகவே, புதியதாக ஒரு ஹீரோவை உருவாக்கவேண்டும் என்று முடிவு செய்தார்.

“1963ல், மக்கள் அதிகம் வெறுக்கக்கூடிய விஷயம் என்னவாக இருந்தது என்றால், அது ராணுவம்தான். பனிப்போரின் உச்சகட்டம். ஆகவே, என் வழக்கப்படி, மக்கள் அதிகமாக வெறுத்த ஒரு விஷயத்தையே அவர்களின் மீது அளவுக்கதிகமாகத் திணித்து, அவர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் பிடிக்கவைக்க விரும்பினேன். ஆகவே, ஒரு ஆயுத வியாபாரியாக எனது ஹீரோவை உருவாக்கினேன். எப்போது பார்த்தாலும் ஆயுதங்களையே சிந்தித்து ஆயுதங்களையே வாழ்ந்து வந்த நபராக என் ஹீரோ இருந்தான். கூடவே, அவன் ஒரு பெரும் பணக்காரனாகவும் இருந்தான். பெண்களுடனேயே காலம் கழிக்கும் மனிதன். பிறரின் கவலைகளைப் பற்றிக் கவலையில்லாத மனிதன். ஆயிரம் இருந்தும்.... வசதிகள் இருந்தும்...நிம்மதி இல்லாமல் அவனை அலைக்கழிப்பதற்கென்றே அவனது உள்மனதில் ஒரு ரகசியம் உண்டு. ஆம். அவனது இருதயம் அழிந்துகொண்டிருக்கிறது. இதிலிருந்து தன்னை அவன் எப்படிக் காத்துக்கொள்கிறான்?

இந்தப் பணக்கார கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, ஹோவார்ட் ஹ்யூஸ் (Howard Hughes - The Aviator பட நாயகனாகக் காண்பிக்கப்பட்ட மனிதர்). மிகப்பெரும் பணக்காரர். கூடவே நட்டு கழண்ட கேஸ். ஆனால், என் கதாபாத்திரம், நட்டு கழண்டவன் அல்ல. அது ஒன்றுதான் இருவருக்கும் வித்தியாசம். அப்படி நான் உருவாக்கிய அந்தக் கதாபாத்திரம், அத்தனை பேருக்கும் மிகவும் பிடித்துப்போய்விட்டது”.


Iron man original cover 1963


இப்படியாக, டோனி ஸ்டார்க் (Tony Stark) அலையாஸ் Iron Man உருவானான். முதல் காமிக்ஸில் இந்த அயர்ன் மேன் கதாபாத்திரம், நமது லயன் காமிக்ஸின் சட்டித்தலையன் ஆர்ச்சியைப் போலவே இருந்ததை, போஸ்டரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதன்பின் சிறுகச்சிறுக அவனது உடை வியக்கத்தக்க மாறுதல்களை அடைந்தது.

 இந்த மூவரையும் உருவாக்கிய பிரம்மா ஸ்டான் லீ, ஒரு பிரம்மாண்டமான ஹீரோக்கள் குழுமத்தை உருவாக நினைத்தார். அப்படி ஏற்கெனவே DC காமிக்ஸின் ஜஸ்டிஸ் லீக்குக்குப் போட்டியாக அவர் உருவாக்கியிருந்த Fantastic Four, பலத்த வெற்றியடைந்திருந்தது. ஆனால், ஃபண்டாஸ்டிக் ஃபோர் கதையின் நாயகர்கள், பிரம்மாண்ட ஹீரோக்கள் அல்லர். ஒரு வெற்றிகரமான ஹீரோ என்றால், அவனுக்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. அப்படி சில குணாம்சங்களோடு அதன்பின் அவர் உருவாக்கிய மூன்று கதாபாத்திரங்களை ஒருங்கிணைத்து, ஒரு அதிரடி குழுமம் அமைப்பது ஸ்டான் லீயின் யோசனை. அதனால், ஜஸ்டிஸ் லீக்கில் இருக்கும் இரண்டு பிரம்மாண்ட ஹீரோக்களைக் (Batman & Superman) கொஞ்சமாவது ஈடுகட்டும் வகையில் ஒன்றிரண்டு நபர்கள் வேண்டும் என்று அவர் நினைத்தபோது, கிட்டத்தட்ட பேட்மேன் மற்றும் சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் உருவான காலகட்டத்திலேயே உருவான மற்றொரு கதாபாத்திரத்தின் நினைவு ஸ்டான் லீக்கு வந்தது. அந்தக் கதாபாத்திரத்தோடுதான் ஸ்டான் லீயின் காமிக்ஸ் வாழ்க்கை தொடங்கியிருந்தது.

ஆம். 1941 மே மாதத்தில், தனது பதினெட்டரையாவது வயதில், அந்தக் காமிக்ஸில், ஃபில்லராக ஒரு மிகச்சிறிய கதையின் மூலம்தான் அறிமுகமாகியிருந்தார் ஸ்டான் லீ என்பது இந்தத் தொடரின் முதல் பகுதியைப் படித்த நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.

September 1963. இந்த மூன்று மெகா ஹீரோக்கள் ஒன்றுசேர்ந்து மிரட்டிய முதல் கதை வெளிவந்தது. இந்த மூன்று ஹீரோக்களுடன் சேர்ந்து, Ant-Man என்று இன்னொரு ஹீரோவும், The Wasp என்ற ஒரு ஹீரோயினும் அக்கதையில் இடம்பெற்றிருப்பார்கள். இந்த இருவருமே ஸ்டான் லீயின் உருவாக்கங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

இந்தக் கும்பலின் பெயர் - The Avengers. கதையின் வில்லன் - தோரின் சகோதரன் லோகி.


இந்தக் கதை பலத்த வரவேற்பு பெற்றது. இக்கதையோடு ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. இதன்பின் தொடர்ச்சியாக இந்த சீரீஸ் வெளிவரவும் ஆரம்பித்தது.

இந்த சீரீஸின் இரண்டாவது காமிக்ஸில், இந்தக் கும்பலிலிருந்து ஹல்க் வெளியேறிவிடுகிறான். அவனது நிலையில்லாத ஆளுமை, பிற ஹீரோக்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவனாகவே நினைத்ததே காரணம். அப்படி வெளியேறிய ஹல்க்கைத் தேடி, மற்ற கதாநாயகர்கள் பயணம் மேற்கொள்ளும்போது, தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஹீரோதான் இந்த கும்பலின் நான்காவது மற்றும் தலையாய ஹீரோ. அவர் கண்டுபிடிக்கப்பட்டதும் சீரீஸின் நான்காவது காமிக்ஸில்தான்.

உண்மையில், இந்த ஹீரோக்களுக்கெல்லாம் சீனியர் அவர். இந்த ஹீரோ உருவான ஆண்டு - 1941 மார்ச். ஒரு கடுமையான தேசபக்த ஹீரோ வேண்டும் என்று ஜோ சைமன் என்ற பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் நினைத்தபோது - அந்த ஆண்டையும் மனதில் வையுங்கள். இரண்டாம் உலகப்போரின் உச்சம் - உருவான கதாநாயகனே நமது புதிய ஹீரோ. மனிதர்களின் உச்சபட்ச தாங்கும் திறனும் செயல்புரியும் திறமையும் ஒருங்கே உடையவனாக இந்த ஹீரோ உருவாக்கப்பட்டான். இவனது ஆயுதம் - மிகவும் சக்திவாய்ந்த கேடயம். கைகலப்பில் தோற்கடிக்கமுடியாத திறன் படைத்தவன். இன்றுவரை, IGN காமிக்ஸ் ஹீரோக்கள் பட்டியலில், ஆல்டைம் நம்பர் ஆறு. அமெரிக்காவின் டாப் ஹீரோக்களில் ஒருவன். இத்தனை திறன்கள் இருந்தும், உலகப்போர் முடிந்து, நாற்பதுகளின் இறுதியில் மெல்ல மெல்ல மக்களால் மறக்கப்பட்டு மறைந்துபோய் விட்டான் இவன்.

ஆகவே, மறுபடியும் ஸ்டான் லீயின் மூளை குறுக்கில் வேலை செய்த பலன், ஹல்க்கைத் தேடிச் சென்ற ஹீரோக்கள், இந்த ஹீரோவைக் கண்டுபிடித்ததாக ஒரு கதையை அமைப்பதில் முடிந்தது. அது டக்கராக வேலை செய்தது. தனியாக இருந்தபோது மக்களால் விரும்பப்படாத ஹீரோ, கும்பலில் சேர்ந்தவுடன் மறுபடி மக்களால் விரும்பப்பட்டான்.


இங்கே ஒரு பெர்ஸனல் கருத்து: நான் படித்த வரையில், எனக்கு பிடிக்கவே பிடிக்காத ஒரே ஹீரோ இந்த ஹீரோதான். அடுத்த இடம்: சூப்பர்மேன்.

இப்படித்தான் அவெஞ்சர்ஸ் காமிக்ஸின் வரலாறு ஆரம்பித்தது. அந்தப் பழைய ஹீரோ - யெஸ். கேப்டன் அமெரிக்கா.


1942ல், ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற காமிக்ஸ் புத்தக எழுத்தாளர், அமெரிக்க ராணுவத்தில் சேர முயற்சிப்பதிலிருந்து கேப்டன் அமெரிக்காவின் கதை துவங்குகிறது. ஆள் மிகவும் ஒல்லியாகவும் வீக்காகவும் இருப்பதால், ராணுவத்திலிருந்து ரிஜக்ட் செய்யப்படுகிறார். அப்போது, ஜெனரல் செஸ்டர் பில்லிப்ஸினால், ஒரு குறிப்பிட்ட பரிசோதனைக்காக ரோஜர்ஸ் செலக்ட் செய்யப்படுகிறான். மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீனின் கண்டுபிடிப்பான ஒரு மருந்து, இவனது உடலில் செலுத்தப்படுகிறது. இதனால், மனிதர்களிலேயே மிகச்சக்திவாய்ந்தவனாக மாறிப்போகிறான் ரோஜர்ஸ். ஆனால், மருத்துவர் ஆப்ரஹாம் எர்ஸ்கீன் கொல்லப்பட்டுவிடுவதால், இந்த மருந்தின் ஃபார்முலா யாருக்கும் தெரியாமல் அழிந்துவிடுகிறது. எனவே, அமெரிக்க அரசாங்கமே ரோஜர்ஸுக்கு ‘கேப்டன் அமெரிக்கா’ என்ற பெயரை அளித்து, கேடயம், ஹீரோ உடை அகியவற்றையும் அளிக்கிறது. அதே சமயம், ரோஜர்ஸ், அமெரிக்க ராணுவத்தின் சோனி சிப்பாயாகவும் வேடமிடுகிறான்.

இதுதான் கேப்டன் அமெரிக்காவின் கதை. உலகப்போரின் முடிவில், வட அட்லாண்டிக்கில் ரோஜர்ஸ் பயணித்த விமானம் வெடித்து, கடலில் ரோஜர்ஸ் வீசப்பட்டு, அதன்பின் தொலைந்துபோய்விட்டதாக ஒரு காமிக்ஸ் கதை இருக்கிறது. இக்கதைதான் கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் உபயோகப்படுத்திக்கொள்ளப்பட்டது.

சென்ற ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில், மேலே சொன்ன கதை பெரும்பாலும் அப்படியே சொல்லப்பட்டிருக்கும். கூடவே, கேப்டன் அமெரிக்கா, 70 ஆண்டுகள் கழித்து மீண்டும் துயில் எழுவதாக அதன் க்ளைமேக்ஸ் முடிந்திருக்கும்.




இப்படி ஆரம்பித்த அவெஞ்சர்ஸ் வரலாறு, பழைய ஹீரோக்கள் விலகி, பல புதிய ஹீரோக்கள் அறிமுகம், மறுபடியும் பழையவர்களில் சிலர் திரும்பி வந்தது, சிலரின் கௌரவ வேடம் என்றெல்லாம் போய், ’புதிய அவெஞ்சர்கள்’, ‘பலம்வாய்ந்த அவெஞ்சர்கள்’, ‘இருண்ட அவெஞ்சர்கள்’ என்பதுபோல பல அவதாரங்கள் எடுத்துள்ளது.

இந்த அவெஞ்சர்களின் பொதுவான நோக்கம் என்னவெனில், எந்த ஒரு தனிப்பட்ட ஹீரோவினாலும் முறியடிக்கமுடியாத சக்தியை அனைவரும் சேர்ந்து எதிர்ப்பதுதான். இவர்களை ஒன்றுசேர்க்கும் கோஷம் - ’Avengers Assemble!’ என்பதே.


இதுவரை வெளிவந்துள்ள அவெஞ்சர் ஹீரோக்களின் படங்களான 'Iron Man', 'The Incredible Hulk', 'Iron Man 2', 'Thor' மற்றும் 'Captain America: The First Avenger' படங்களிலெல்லாம் ஒரு பொதுவான இழை உண்டு.

அதற்குமுன், இந்தக் காட்சியைப் பார்த்துவிடுங்கள். இதுவரை வந்திருக்கும் இந்தப் படங்களில், டைட்டில்கள் முடிந்தபின்னர் வரும் சிறிய ஸீன்களின் தொகுப்பு இது.


இந்த அத்தனை காட்சிகளிலும் வரும் அந்த ஒற்றைக்கண்ணன் யார்? அந்த நபரின் வேலை என்ன?
அதைத்தான் இன்றைய கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.



மே 1963ல் ஸ்டான் லீயும் ஓவியர் ஜாக் கிர்பியும் உருவாக்கிய S.H.I.E.L.D. என்ற ஏஜென்ஸியின் தலையாய துப்பறிவாளனே இந்த நிக் ஃப்யூரி. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்துமே, வயது ஏறாத ஒரு கதாபாத்திரம். Infinity ஃபார்முலா என்ற மருந்தை அவ்வப்போது குடித்துவருவதால் சாகாவரம் பெற்றவராக இருக்கிறார் இவர். முதல் உலகப்போரின் சாகஸவீரரான ஜாக் ஃப்யூரியின் மூத்த மகனாக, 1917லிருந்து 1923க்குள் பிறந்த நிக் ஃப்யூரி, தந்தையைப் போலவே ஒரு சாகஸ விரும்பியாகவே திகழ்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது ஹவாயில் அமெரிக்க ராணுவத்தின் வீரராக அமர்த்தப்பட்ட நிக் ஃப்யூரியின் நெருங்கிய நண்பன் ரெட், பேர்ல் ஹார்பர் தாக்குதலில் உயிரிழந்துவிட, அன்றிலிருந்து நாஜிக்களும் ஜப்பானும் நிக் ஃப்யூரியின் எதிரிகளாக மாறுகின்றனர். இதன்பின், ஒரு அதிரடிப்படையின் தலைமைப்பொறுப்பை ஏற்கும் நிக் ஃப்யூரி, போலந்தை ஜெர்மனி தாக்கிக்கொண்டிருந்த பல்வேறு பகுதிகளில், பல அஸைன்மென்ட்களில் ஈடுபடுகிறார்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த தருணங்களில், ஃப்ரான்ஸில், ஒரு குண்டுவெடிப்பில் மரண காயம் அடைகிறார் நிக் ஃப்யூரி. அப்போது, ஸ்டெர்ன்பெர்க் என்றவரால் காப்பாற்றப்பட்டு, அவர் கண்டுபிடித்து வைத்திருந்த Infinity ஃபார்முலாவைப் பரிசோதிக்கக்கூடிய சோதனை எலியாக மாறி, அந்த ஃபார்முலா ஃப்யூரியின் உடலில் செலுத்தப்படுகிறது. அதுதான் ஃப்யூரியின் சாகாவரத்துக்குக் காரணம். ஆனால், அந்த மருந்து அவரது உடலில் சீரான இடைவெளிகளில் செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால், வெகுவிரைவில் மரணம் சம்பவிக்கும்.

இதன்பின், CIAவில் சேர்கிறார் ஃப்யூரி. கொரியாவில் பல சாகஸங்களில் ஈடுபடும் ப்யூரியைத் தேடிவருகிறது கர்னல் பதவி. இந்தச் சமயத்தில்தான் ரிச்சர்ட் பார்க்கர் மற்றும் அவரது மனைவி மேரி பார்க்கர் ஆகிய இரண்டுபேரை CIAவில் சேர்த்துக்கொள்கிறார் ஃப்யூரி (இந்த இருவரின் மகன், பிந்நாட்களில் உலகப்பிரசித்தி அடையப்போகிறான். அவன் பெயர் - பீட்டர் பார்க்கர்). இதன்பின், மெல்ல மெல்ல CIAவின் தொடர்பாளராக அந்தச் சமயத்தில் உருவாகியிருந்த பல சூப்பர்ஹீரோ கும்பல்களோடு பேச்சுவார்த்தையும் நடத்திவந்தார் ஃப்யூரி (குறிப்பாக Fantastic Four).

அப்போதுதான் தனது இடது கண்ணில் கறுப்புத்திரை அணிய ஆரம்பித்தார் ஃப்யூரி. ஒரு குண்டின் துகள் அவரது கண்ணில் புகுந்து, கண்பார்வையை 95% பறித்துவிட்டதால் இந்த கறுப்புத்திரை. எந்தவித ஆபரேஷனும் செய்துகொண்டு கண்பார்வையை மீட்க மறுத்துவிடுகிறார் ஃப்யூரி.

இந்தச் சமயத்தில்தான் அவரை அணுகுகிறான் டோனி ஸ்டார்க் என்ற மனிதன். Iron Man என்ற அவதாரமும் இவனுக்கு உண்டு. S.H.I.E.L.D. என்ற அமைப்பு ஒன்று இருப்பதாகவும், அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரியாக செயல்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறான். அதனை ஏற்று, அந்த அமைப்பின் தலைமைப்பொறுப்பில் அமர்கிறார் ஃப்யூரி.

S.H.I.E.L.D. என்றால், Supreme Headquarters, International Espionage, Law-Enforcement Divisionஎன்று அர்த்தம். இது ஆரம்ப நாட்களில். இதன்பின் Strategic Hazard Intervention Espionage Logistics Directorate. என்று மாற்றப்பட்டு, அதன்பின், திரைப்படங்களில் Strategic Homeland Intervention, Enforcement and Logistics Division  என்று பெயர்சூட்டப்பட்ட அமைப்பு இது. இதன் வேலை? தீயவர்களை வேட்டையாடி, நாட்டில் அமைதி நிலவச் செய்வதே.

ஃப்யூரியின் நிர்வாகத்தில், இந்த அமைப்பு, உலகின் மிகசக்திவாய்ந்த சுதந்திரமான அமைப்பாக உருவெடுத்தது. இதன்பின், அரசுத்தரப்பில் சூப்பர் ஹீரோக்களைத் தொடர்பு கொள்வது, ஃப்யூரியின் மூலமாகவே நிறைவேறியது. பல வருடங்கள் இப்படிக் கழிந்தபின், ஒரு தீய அமைப்பு, ஷீல்டின் பல ஏஜென்ட்களை விலைக்கு வாங்கி, ஃப்யூரியையே வேட்டையாடத் தூண்டுகிறது. மனமொடிந்த ஃப்யூரி தலைமறைவாகிறார். இதன்பின் மறுபடி வெளிவரும் ஃப்யூரி, இம்முறை இன்னமும் பலமாக ஷீல்டைக் கட்டமைக்கிறார். இதன்பின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன (ப்யூரி மறுபடி தலைமறைவாவது, டோனி ஸ்டார்க் ஷீல்டின் தலைவராவது, அதன்பின் டோனியின் உதவியோடு மறுபடி ஃப்யூரி வெளிவருவது).

இப்படியாக, உலகின் அதிசக்திவாய்ந்த ஒரு அமைப்பின் தலைவராக எப்பொழுதும் இருந்துகொண்டு, தீயவர்களை வேட்டையாடுவதே ஃப்யூரியின் வேலை.

ஃப்யூரியால் செய்யமுடியாது எதுவுமே இல்லை. கைகலப்பில் எக்ஸ்பர்ட். மூன்று பெரும்போர்களில் பங்காற்றியவர் (இரண்டாம் உலகப்போர், கொரியப்போர், வியட்நாம் போர்). அதிபுத்திசாலி. பல்வேறு ராணுவ மூவ்களில் சாணக்கியர். குண்டுகளைக் கையாள்வதில் கில்லாடி. பல்வேறு வாகனங்களைக் கையாள்வதில் வல்லவர். விமான வீரர். எப்பொழுதும் குண்டுதுளைக்காத உடுப்பு போட்டுக்கொண்டு நடமாடுபவர். துப்பாக்கி சுடுவதில் நம்பர் ஒன். ஷீல்டில், ஃப்யூரிக்கு மட்டுமே தெரிந்த பல்வேறு ரகசிய மறைவிடங்களும், ஆயுதத்தளவாடங்களும் எக்கச்சக்கம். அவரால் மட்டுமே இந்த இடங்களுக்குச் செல்ல முடியும்.


ஃப்யூரியின் நிறம் வெளுப்பு 

இவர்தான் ஒரிஜினல் வெள்ளை நிக் ஃப்யூரி

இப்போது, அவெஞ்சர்ஸ் படம் வெளிவரும்போது, உலகெங்கும் காமிக்ஸ் ரசிகர்களுடைய நம்பர் ஒன் பிரச்னையாக இருப்பது என்னவெனில், ஒரிஜினல் காமிக்ஸின்படி, ஃப்யூரி ஒரு வெள்ளையர். ஆனால், இப்படங்களில் நிக் ஃப்யூரியாக நடிப்பவரோ கறுப்பின நடிகரான ஸாமுவேல் ஜாக்ஸன். இதுதான் ரசிகர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணம். இதை நம்மூர் பாஷையில் சொல்லவேண்டும் என்றால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும்போது, வந்தியத்தேவனாக வில் ஸ்மித் நடித்தால் நம்மால் ஒத்துக்கொள்ளமுடியுமா?

ஃப்யூரி கதாபாத்திரம் உருவாக்கப்படும்போதே, தங்க நிறத்தில் முடியுடன்,  எப்போது பார்த்தாலும் சுருட்டை வாயில் வைத்துக்கொண்டு, ஸ்டைலான ஒரு கதாநாயகனாகத்தான் உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட உருவத்துடனேதான் பல ஆண்டு காலம் இக்காமிக்ஸ் வெளியிடப்பட்டது. அப்படியிருக்கும்போது, இடையில் கொஞ்ச காலம் அமுங்கியிருந்துவிட்டு, இந்த நிக் ஃப்யூரி கதாபாத்திரத்தை மறுபடியும் வெளிக்கொணரும்போது, தடாலென்று ஒரு கறுப்பின கதாபாத்திரமாக வெளியிட்டனர் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார். அப்போதுகூட இந்தக் கதாபாத்திரம் யாரையும் ஒத்திருக்கவில்லை. ஆனால், 2002ல் வெளிவந்த ’The Ultimates' காமிக்ஸில், ஃப்யூரி, அப்படியே ஸாமுவேல் ஜாக்ஸனை உரித்துவைத்திருந்தார். ஜாக்ஸனிடம் இந்த விஷயம் கூறப்பட்டு, அவரது அனுமதி பெறப்பட்டே இந்த மாற்றம் உருவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர்தான் மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்கள் திரையில் உருவெடுத்தபோது, ஜாக்ஸனே மார்வெலிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இக்கதாபாத்திரத்தை ஏற்றார்.

இந்தப் புதிய கறுப்பின நிக் ஃப்யூரியின் கதாபாத்திரத்தின் பெயர் - அல்டிமேட் நிக் ஃப்யூரி’. இக்கதாபாத்திரம், கல்லூரியை இந்தியாவில் படித்ததாக ஒரு புதிய துணுக்குச்செய்தியும் உண்டு.

மேலே நாம் பார்த்த வீடியோவில், ஒவ்வொரு ஹீரோவிடமும் சென்று இந்த மொட்டை ஒற்றைக்கண் நிக் ஃப்யூரி பேசுவதைக் கேட்டாலே, இவர் என்னமோ செய்ய முனைகிறார் என்பது தெரிந்துவிடும். ஐயர்ன் மேன் வெளிவந்ததிலிருந்து, இந்த post-credit ஸீன்களை நான் தவறவே விட்டதில்லை. படத்தில் என்ன வருகிறது என்பதைவிட, இந்த சில செகண்ட் காட்சிகளில் என்ன வருகிறது என்பதில்தான் என் ஆர்வம் முழுக்க இருக்கும். குறிப்பாக, ஐயர்ன் மேன் இரண்டில், கடைசியில், பள்ளத்தாக்கில் ஒரு சுத்தியலைக் காண்பிக்கும் அந்த கடைசி ஷாட்டைப் பார்த்ததும் தோர் படத்தின் மீது ஒரு ஆர்வம் வந்துவிட்டது.

பி.கு:

1. டேவிட் ஹேஸல்ஹாஃப் (Baywatch புகழ்) நடித்து, Nick Fury: Agent of S.H.I.E.L.D. என்று ஒரு தொலைக்காட்சிப் படம் உண்டு.





அவெஞ்சர்ஸ் கதையைத் திரைப்படமாக எடுப்பதில் இருந்த பிரதான சிக்கல் என்னவென்றால், இக்கதையில் பல சூப்பர் ஹீரோக்கள் இருந்ததே. ஒவ்வொரு சூப்பர்ஹீரோவின் கதையையும் படத்தில் காண்பிக்கவே நான்கைந்து மணி நேரம் ஆகிவிடும். இதில் அவெஞ்சர்ஸ் கதையை எப்படி திரையில் காண்பிப்பது? ஆகவே, மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தார், ஒரு யோசனையை செயல்படுத்திப்பார்க்க முடிவுசெய்தனர். ஒவ்வொரு கதாநாயகனுக்கும் ஒவ்வொரு திரைப்படம் எடுத்து வெளியிட்டால் என்ன?

இந்த யோசனையின் பேரில் முதன்முதலில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் படம், ’Iron Man'. 2008 மேயில் வெளிவந்து பிரம்மாண்ட வெற்றியடைந்த படம் இது. இப்படத்தின் கூடவே எடுக்கப்பட்டு, இப்படம் வந்த அடுத்த மாதம் வெளியிடப்பட்ட படம், 'The Incredible Hulk'. ஹல்க் திரைப்படத்தை வெளியிடும் முன்னர் மார்வெல் நிறுவனத்தாருக்கு இருந்த சிக்கல் என்னவெனில், ஏற்கெனவே 2003ல், ’Hulk' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்தப் படம் சுமாராக ஓடியிருந்தது வேறு கதை. இருந்தாலும், இந்த ஒரிஜினல் படம், அவெஞ்சர்ஸ் கதையில் சம்மந்தப்படுத்திப் பார்க்கக்கூடிய ஹல்க்கின் ஆளுமைக்கு சரியான வெளிப்பாடாக இருக்கவில்லை என்றே மார்வெல் நிறுவனத்தார் கருதினர். எப்படியும் ஒரிஜினல் படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் வெளிவரவேண்டும் என்றும் ஏற்கெனவே மார்வெல் முடிவு செய்திருந்தது. ஆகவே, அவெஞ்சர்ஸ் படம் வெளிவருவதற்காக, அதற்கு முன்னர் ஹல்க்குக்கு ஒரு சரியான ட்ரெய்லராக, 2008ல் வெளியான Incredible Hulk இருந்தது.

இதன்பின்னர், 2010ல் Iron Man 2 வெளியானது. அதுவுமே மெகா வெற்றி அடைந்தது.

அவெஞ்சர் சீரிஸில் அடுத்த படமாக வந்தது, 'Thor'. மே 2011ல் வெளியிடப்பட்ட இப்படம், அவெஞ்சர்களில் ஒருவனான 'தோர்' என்ற கடவுளைப் பற்றிய கதையாக இருந்தது. பாக்ஸ் ஆஃபீசில் பெருவெற்றியடைந்த 2011ன் பதினைந்தாவது படமாக இருந்தது இப்படம்.

இதன்பின்னர், ஜூலை 2011ல் 'Captain America: The First Avenger' என்ற அடுத்த அவெஞ்சர் படம் ரிலீஸ் ஆனது. அமெரிக்காவில் சுமாராக வசூல் அனாலும், உலகெங்கும் இப்படம் குவித்த பட்ஜெட்: 368 மில்லியன்கள் (பட பட்ஜெட் 140 மில்லியன்).

இப்படியாக, அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு சூப்பர் ஹீரோவுக்கும் ஒரு படம் என்ற மார்வெல் கனவு பலித்தது.

சரி. இதெல்லாம் ஒகே. ஆனால், மக்களுக்கு இந்த அவெஞ்சர்ஸ் படத்தைப் பற்றிய பில்டப்பை எப்படி ஏற்றுவது? ஒரே வழி என்னவெனில், இந்த ஒவ்வொரு படத்திலும், மற்ற படங்களைப் பற்றிய மிகச்சிறிய க்ளூவை எதாவது ஒரு ஷாட்டில் வைத்துவிடுவது. இதை மக்கள் கண்டுபிடிக்கிறார்களா பார்ப்போம் என்று நினைத்தனர் மார்வெல் நிர்வாகத்தினர்.

இதன்படி, இனிமேல் வரிசையாக சூப்பர் ஹீரோ படங்கள் வரப்போகின்றன என்பதற்கு ஒரு க்ளூவாக, Iron Man படத்தின் முதல் பாகத்தின் பாதியில், ஒரு காட்சியின் பின்னணியில், மொத்தம் மூன்றே செகண்டுகளுக்கு கேப்டன் அமெரிக்காவின் கேடயம் காட்டப்பட்டது.

கீழேயுள்ள சிறிய வீடியோவில், கேடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலுள்ள மற்ற விஷயங்களையும் கவனியுங்கள். Iron Man வெளிவந்த காலத்தில் இந்த ரகசியத்தைக் கண்டுபிடித்த மிகச்சில ரசிக வெறியர்களில் இவரும் ஒருவர் என்பது புரியும்.



அதேபோல், இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் பெரும்பாலானவர்கள் செட்டில் இல்லாத சமயத்தில், ரகசியமாக ஸாமுவேல் ஜாக்ஸன் வழவழைக்கப்பட்டு, இப்படத்தின் டைட்டில்களுக்குப் பின்னர் நிக் ஃப்யூரி டோனி ஸ்டார்க்கை சந்தித்துப் பேசும் மிகச்சிறிய காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்புக்குழுவினருக்கே தெரியாத இந்த ரகசியம், படம் வந்தபின்னர்தான் அவர்களுக்கும் ரசிகர்களுக்கும் புரிந்தது. அந்தக் காட்சி மறுபடியும் உங்களுக்காக இங்கே. இந்தப் படம் வெளிவந்ததும், எப்படியும் எல்லா அவெஞ்சர்களையும் பற்றிய படங்கள் வரப்போகிறது என்று ரசிகர்களுக்கு ஒரு ஹேஷ்யமாக அமைந்த காட்சி இது.


இந்தக் காட்சியில், டோனி ஸ்டார்க்கை சந்திக்கும் நிக் ஃப்யூரி, உலகில் இருக்கும் ஒருசில சூப்பர்ஹீரோக்களில் ஸ்டார்க்கும் ஒருவன் என்று சொல்லி, அவெஞ்சர்கள் என்ற ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப்போவதாகவும் சொல்கிறார். எப்படியும் பின்னால் ஒரு நாள் Avengersஎன்ற படம் வரப்போகிறது என்பதற்கு ஒரு அத்தாட்சியாக இந்தக் காட்சி அமைந்தது. ரசிகர்கள் குஷியடைந்தனர்.

இதன்பின், உடனேயே வெளியான 'The Incredible Hulk' படத்திலும் ஒரு க்ளூ வைக்கப்பட்டது.

படத்தின் இறுதியில், டைட்டில்களுக்குப் பின்னர், டோனி ஸ்டார்க், ஜெனரல் ராஸுடன் பேசுவது போன்ற ஒரு காட்சி உண்டு. அதில், ஒரு டீமை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஸ்டார்க் சொல்லும் வசனம் பிரசித்தியானது. இதன்மூலம், அவெஞ்சர்ஸ் படத்துக்கான அடுத்த க்ளூவும் கிடைத்ததால், ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர்.

கூடவே, இப்படம் டிவிடியில் வெளியானபோது, படத்தின் தொடக்கத்தில், ஒரு முப்பது நொடிக் காட்சி இடம்பெற்றது. அதில், பனியில் உறைந்திருக்கும் கேப்டன் அமெரிக்கா காட்டப்பட்டார். இதோ கீழேயுள்ள வீடியோவில் அதைக் காணலாம். Incredible Hulk படத்தைத் திரையரங்கில் பார்த்திருக்கும் நண்பர்கள், இந்தத் துவக்கக்காட்சியைக் கண்டிருக்க முடியாது. இது டிவிடி எக்ஸ்க்ளூஸிவ். தற்கொலை செய்துகொள்ள ஆர்க்டிக் செல்லும் ப்ரூஸ் பேன்னரின் (ஹல்க்) அறிமுகத்தோடு, அவன் ஹல்க்காக மாறும் காட்சி, அதன்பின் அவனது கோபத்தால் ஒரு பெரிய பனிப்பாறை சிதறுவது என்ற காட்சியோடு இந்த ஓபனிங் ஸீக்வென்ஸ் முடியும். இப்போது, இரண்டாம் வீடியோவை நோக்குங்கள். தனது சிவப்பு உடையோடு, பனியினுள் புதைந்திருக்கும் கேப்டன் அமெரிக்காவின் உடல், ஹல்க்கின் அதிரடியால் வெளிப்படுவதைக் காணலாம். இது, ஹல்க் பட இயக்குநர் லூயிஸ் லெடெரியராலேயே உறுதிப்படுத்தப்பட்ட காட்சி.





இதன்பின் வெளிவந்தது Iron Man 2. இம்முறை, க்ளூக்களை அதிகமாகவே அள்ளித்தெளித்திருந்தனர். ஒரு உதாரணமாக, இரண்டாம் பாகத்தில் நிக் ஃப்யூரியும் டோனி ஸ்டார்க்கும் S.H.I.E.L.D. அலுவலகத்தில் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில், பின்னணியில் வீடியோக்கள் சில ஓடிக்கொண்டிருக்கும். அதில் ஒன்றுதான், கல்வர் பல்கலைக்கழகத்தில் நடந்த பெரும் அழிவு. ஹல்க் படம் பார்த்தவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி நன்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். கல்வர் பல்கலைக்கழகத்தில்தான் ப்ரூஸ் பேன்னர் என்ற விஞ்ஞானி ஹல்க்காக மாறிய நிகழ்ச்சி நடந்தது. பேன்னர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மறுபடி வரும்போதுதான் ஜெனரல் ராஸின் படைகளால் தாக்கப்படுவார். இந்தத் தாக்குதல்தான் Iron Man 2 படத்தில் ஃப்யூரியும் ஸ்டார்க்கும் பேசும் காட்சியின் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். அதேபோல், அதே காட்சியில், இன்னொரு திரையில், ஒரு பெரிய பாலைவனத்தின் நடுவில் பெரிய பள்ளம் ஒன்றும் காட்டப்பட்டிருக்கும். Thor படத்தில், தோரின் சுத்தியல் பூமியில் விழும் நிகழ்வு நினைவிருக்கிறதா? பூமியில் விழுந்த சுத்தியல், இப்பாலைவனத்தில் ஒரு பெரும் பள்ளத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி, ஐயர்ன் மேனில் ட்ரெய்லராகக் காண்பிக்கப்பட்டது. அதேபோல், ஐயர்ன் மேன் முதல் பாகத்தில் நாம் இரண்டு நொடிகளே பார்த்த கேப்டன் அமெரிக்காவின் கேடயம், இந்த இரண்டாவது பாகத்திலும் தெளிவாகவே காட்டப்பட்டது.

இதோ இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தால், Iron Man மற்றும் Iron Man 2 ஆகிய படங்களில் மொத்தமாக ஒளிந்துள்ள அத்தனை க்ளூக்களையும் பார்க்கலாம்.



மேலே உள்ள வீடியோக்களில், Easter Egg என்றால், ரகசியம் என்று பொருள். அதேபோல், member of ten rings என்பது, Iron Man காமிக்ஸில் வரும் வில்லன் கும்பல்.

இதற்கடுத்து வெளிவந்தது, Thor. அதிலும் மிகச்சில க்ளூக்கள் இருந்தன. ஆனால் அதிலிருந்த க்ளூக்கள், இதுவரை வந்திருந்த தோர் காமிக்ஸ்களைப் பற்றியனவாகவே இருந்தன. இருந்தாலும், அந்தக் க்ளூக்களையும் பார்ப்போம் என்று நினைப்பவர்கள், இந்த வீடியோவைப் பார்க்கலாம்.



இதன்பின்னர் கடைசியாக வெளிவந்த Captain America திரைப்படத்தில், வழக்கப்படி கேப்டன் அமெரிக்கா காமிக்ஸ் சம்மந்தப்பட்ட க்ளூக்கள் இருந்தன. அவற்றையும் கீழே பார்க்கலாம்.



இந்த எல்லா வீடியோக்களின் பொதுவான அம்சமும், இந்தக் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டான் லீயின் சில நொடி கேமியோக்கள்தான். இந்த அத்தனை படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். அதனையும் இந்த வீடியோக்களில் பார்க்கலாம்.

சரி. இதுவரை நான்கே கதாநாயகர்களைத்தானே பார்த்திருக்கிறோம் (Iron Man, Hulk, Thor & Captain America). ஆனால் அவெஞ்சர்ஸ் படத்தில் மொத்தம் ஆறு நாயகர்கள் என்று விளம்பரப்படுத்தப்படுகிறதே? அது என்ன சங்கதி என்று வினவுபவர்களுக்கு, தோர் படத்தில்Hawkeye என்ற நாயகன் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டான் என்று சொல்லலாம். தோரை வேட்டையாட வில் அம்பு கொண்டு அலையும் மனிதன் ஒருவனை நினைவிருக்கிறதா? மேலே தோர் வீடியோவிலும் அவன் வருவான். அதேபோல், ஆறாவது ஹீரோ, ஒரு பெண். Iron Manபடத்தில், டோனி ஸ்டார்க்கின் அஸிஸ்டெண்டாக இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், ‘நடாஷா ரோமனாஃப் (அல்லது) கறுப்பு விதவை (Black Widow) என்ற ஹீரோ(யின்) வேடத்தில் நடித்திருக்கிறார்.

பெர்ஸனலாக, இந்த அவெஞ்சர்ஸ் படத்தில் எனக்குப் பிடித்த நடிகை ஒருவர் இம்முறை நடித்திருக்கிறார். Cobie Smulders என்ற அந்த நடிகை, தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர். நிக் ஃப்யூரியின் அஸிஸ்டெண்ட்டான Maria Hill என்ற வேடத்தில் நடித்திருக்கும் இவர், How I met your Mother தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமானவர். எனக்கு மிகப்பிடித்த தொடர்களில் இதுவும் ஒன்று.

Cobie Smulders as Maria Hill
இத்தனை சிறப்புக்களோடு வெளிவர இருக்கும் The Avengers படத்தின் மையக்கருவானதுவில்லனைஒழிப்பதில் இல்லைமாறாகஇந்த ஒவ்வொரு ஹீரோவுமேபயங்கரமான ஈகோ உடையவர்கள்என்று இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயத்தில் நாம் பார்த்ததை நினைவுகொள்ளுங்கள்ஒருபக்கம்உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவனான டோனி ஸ்டார்க்இவனுக்குஉலகைக் காக்கும்சூப்பர்ஹீரோ Iron Man தான்தான் என்று ஒரு ஈகோ உண்டுமட்டுமல்லாமல்எவரது பேச்சையும்இதுவரை ஸ்டார்க் கேட்டதே இல்லைதான் செய்வதே சரி என்ற கோட்பாடு உடையவன்இந்தரோலுக்கு ராபர்ட் டௌனி ஜூனியரை விடப் பொருத்தமானவர் யார்?

அதேபோல்அடுத்து ஹல்க்இது ஒரு மிருகம்கோபம் வந்தால் பெரிய ராட்சதனாக மாறிஎதிரில்இருப்பதையெல்லாம் அடித்து உடைப்பவன்அத்தகைய கோபத்தில் யார் பேச்சைக்கேட்கப்போகிறான்?

அடுத்து தோர்இவன் மனிதனே அல்லஒரு கடவுள்கடவுளாக இருக்கும் ஒரு நபர்யார் பேச்சைக்கேட்பான்இவனும் ஹல்க் போல ஒரு மகா கோபக்காரன்போதாக்குறைக்குஉலகின் மிகசக்திவாய்ந்த ஆயுதமான ஒரு சுத்தியலை வேறு எப்போதுமே வைத்துக்கொண்டு அலைபவன்.

கேப்டன் அமெரிக்கா மட்டுமே கொஞ்சம் சாதுவான நபர்

இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு ஓடும் எருமைகளின் மேய்ப்பர்நிக் ஃப்யூரிஎப்படிஇவர்களை மேய்க்கப்போகிறார் என்பதே படத்தின் பிரதான அம்சம்இவர்கள் ஒவ்வொருவரும்,சூழ்நிலையைப் புரிந்துகொண்டுஒருவருக்கொருவர் முதலில் முரண்டு பிடித்துபின்னர் நட்பாகிஉதவிக்கொள்வது திரைக்கதையில் நன்றாகவே காட்டப்பட்டுள்ளது என்று படித்தேன்ஆகையால்,அதனைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

வெள்ளியன்று இப்படத்தைப் பார்க்கிறேன்ஆகவேஇந்த சீரீஸை இத்துடன் முடித்துக்கொள்வோம்நண்பர்களேஇதுவரை இந்த சீரீஸைப் பொறுமையுடன் படித்துவந்த அனைவருக்கும் எனதுமனமார்ந்த நன்றிகள்





விமர்சனம்: 



உலகின் மிக விரும்பப்பட்டுப் படிக்கப்படும் நான்கு சூப்பர்ஹீரோக்கள். அவர்களின் ஆற்றலுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு வில்லன். இந்த சூப்பர்ஹீரோக்களைக் கட்டி மேய்க்கும் ஆற்றல்வாய்ந்த அதிகாரி ஒருவர். ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் உள்ள பிரச்னைகள். இந்த விஷயங்களை வைத்துக்கொண்டு, ஹாலிவுட்டின் அரதப் பழைய ஃபார்முலாவான அமெரிக்க அழிவு - அதை ஹீரோக்கள் காப்பாற்றுதல் என்ற வீக்கான கதையை ஒப்பேற்ற முடியுமா? அதுவும், இதுவரை காமிக்ஸ் ஹீரோக்களை வெற்றிகரமாகத் திரையில் காட்டியிருக்கும் ஸாம் ரெய்மி, க்ரிஸ்டோஃபர் நோலன் போன்ற பெரிய கை கை எதுவும் இல்லாமல், சாதாரண இயக்குநர் ஒருவரால்?

Hell Yeah !

ஜாஸ் வீடன் (Joss Wheadon) எப்படி இந்த அளவு அட்டகாசமான திரைப்படம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்? பிற பிரபல இயக்குநர்களிடம் இல்லாத ஒன்று, வீடனிடம் அபரிமிதமாகக் குவிந்திருப்பதே காரணம். காமிக்ஸ் புத்தகம் ஒன்றைத் திரைப்படமாக எடுக்கும்போது, அந்த இயக்குநரே ஒரு காமிக்ஸ் வெறியராக மட்டும் இல்லாமல், காமிக்ஸ் கதைகளை எழுதிக் குவித்து, காமிக்ஸிலேயே ஊறித் திளைத்தவராக இருந்தால், எப்படி இருக்கும்? அதுதான் வீடனின் வெற்றிக்கு முழுமுதல் காரணம். வீடனைப் பற்றித் தெரிந்தவர்கள், அவர் பல காமிக்ஸ் கதைகளுக்கு எழுத்தாளராக இருந்திருப்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள் (Astonishing X Men, Fray ஆகியவை இரண்டு உதாரணங்கள்). இதுமட்டும் இல்லாமல், வெற்றிகரமான தொலைக்காட்சி ஸீரியலாக இருந்த Buffy the Vampire Slayer (பழைய ஸ்டார் ப்ளஸில் இது வந்ததை ஆங்கில ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்) இவரது கைவண்ணமே. இந்த ஸீரியலை இவர் எழுதி இயக்கியதற்குக் காரணம், ஆல்ரெடி 1992ல் இதே பெயரில் வந்த திரைப்படத்துக்கு இவர் திரைக்கதை எழுதிக்கொடுத்ததே. 

இப்படி ஒரு பலத்த அஸ்திவாரம் வீடனுக்கு இருக்கிறது. 

மேலே சாதாரண இயக்குநர் என்று வீடனைப் பற்றிச் சொல்லியிருப்பது, ஓரளவே சரி. ஏனெனில், ஹாலிவுட்டில் வீடன் ஒரு பாப்புலர் நபர். அவெஞ்சர்ஸ் படத்தை இவர் இயக்கப்போகிறார் என்று தெரிந்ததுமே குஷியான மார்வெல் ரசிகர்களே அதிகம். இந்தியாவில் இந்தப் பெயர் அந்த அளவு அறிமுகமில்லாத ஒன்று என்பதாலேயே அப்படிப் போட்டது. 

2007லேயே அவெஞ்சர்ஸ் படத்தின் திரைக்கதை எழுதும் முயற்சி தொடங்கியாயிற்று. The Incredible Hulk திரைக்கதையை எட்வர்ட் நார்ட்டனுடன் சேர்ந்து எழுதிய ஸாக் பென் (Zak Penn - Last Action Hero, Behind Enemy Lines, Inspector Gadget, X men: The Last Stand போன்ற பல திரைக்கதைகளை மற்றவர்களுடன் சேர்ந்து எழுதியிருப்பவர்), அவெஞ்சர்ஸ் படத்துக்கும் திரைக்கதை எழுத அமர்த்தப்பட்டார். இவரது திரைக்கதையைத் திருத்தியது, இயக்குநர் ஜாஸ் வீடனே தான்.

படத்துக்கு இசையமைத்தவர், அலன் ஸில்வெஸ்ட்ரி. 


படத்தின் தக்குனூண்டு கதை என்ன?

‘Thor' படத்திலேயே, பட இறுதியில், ஒரு பெட்டியை நிக் ஃப்யூரி, விஞ்ஞானி ஸெல்விக்கிடம் அளித்து, அதனை ஆராயச் சொல்லும் காட்சி நினைவிருக்கிறதா? இந்தக் காட்சிதான் அவெஞ்சர்ஸ் படத்தின் கதைக்கு ஒரு கரு.

அவெஞ்சர்ஸ் படத்தின் கதை நடைபெறும் காலத்தில், அந்தப் பெட்டியில் உள்ளதை எடுத்து ஆராய்ந்து, அது என்ன என்றும் கண்டுபிடித்தாகிவிட்டது.

ஆங்கிலத்தில் Tesseract என்ற வார்த்தைக்கு, நாற்பரிமாண கனசதுரம் என்று அர்த்தம். இதைப் படித்ததும் பீதியடைந்து ஓடிவிடாதீர்கள். வழக்கமான முப்பரிமாண கனசதுரத்தை, Cube என்று அழைப்போமல்லவா? இருபரிமாண சதுரத்தை Square என்று அழைப்போம். இப்படி சதுரத்துக்கு ஒரு பரிமாணம் அதிகரித்தால் அது க்யூப். க்யூபுக்கு ஒரு பரிமாணம் அதிகரித்து, அது நாற்பரிமாணமுள்ள வஸ்துவாக மாறினால் அது டெஸராக்ட். இப்படிப்பட்ட டெஸராக்ட் ஒன்று, விஞ்ஞானி ஸெல்விக்கால் (தோரின் காதலி ஜேன் ஃபாஸ்டரின் தந்தை) ஃப்யூரி அளித்த ஸூட்கேஸிலிருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால், தற்போது, இந்த டெஸராக்டை கட்டுப்படுத்த முடிவதில்லை. அது ரியாக்ட் செய்கிறது. அப்படியொரு நாள், அதிலிருந்து பீறிப்பாயும் எனர்ஜியால், அஸ்கார்ட் கிரகத்தைச் சேர்ந்த தோரின் அண்ணன் லோகி வெளிப்படுகிறான். S.H.I.E.L.D.அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரையும் செயலிழக்கச் செய்து, அந்த டெஸராக்டையும் எடுத்துக்கொண்டு, கூடவே ஏஜெண்ட் Hawkeye (தோரில் வரும் வில்லாளி) மற்றும் விஞ்ஞானி ஸெல்விக் ஆகியவர்களை மனம் மாற்றி, தன்னுடனே அழைத்துச் சென்றுவிடுகிறான்.

ஏன்?

தோர் படத்தின் க்ளைமாக்ஸில், அஸ்கார்டிலிருந்து தூக்கியெறியப்பட்டுவிடும் லோகி, மற்றொரு கிரகத்தைச் சேர்ந்த வில்லன் க்ரூப் ஒன்றைப் பார்க்க நேர்கிறான். அந்த க்ரூப்பின் லட்சியமே, விண்வெளியில் இருக்கும் அத்தனை கிரகங்களையும் கைப்பற்றுவதே. இவர்களுடன் இணைகிறான் லோகி. இந்த கும்பலின் பெயர், ச்சிடௌரி (Chitauri). இந்த டெஸராக்ட் அவர்களுக்குத் தேவை. ஏனெனில், அதனை உபயோகித்தால், எந்த கிரகத்துக்கும் ஒரு பாதை ஏற்படுத்தலாம். இந்தப் பாதையின் வழியே தங்கள் படைகளை அனுப்பி, அந்த கிரகத்தை கைப்பற்றலாம். ஆகவே, அவர்களுக்கு இந்த டெஸராக்டைக் கொடுப்பதாகவும், பதிலுக்கு பூமியை தனக்காகக் கைப்பற்றித் தரவேண்டும் என்றும் லோகி அவர்களிடம் கோரிக்கை விடுக்கிறான். சம்மதிக்கும் ச்சிடௌரி மர்மத் தலைவர் (இவரது பெயரும் அடையாளமும் கடைசியில்தான் வெளிவரும்), லோகிக்கு ஒரு புதிய ஆயுதத்தை அளிக்கிறார்.

இப்போது புரிந்திருக்குமே? லோகி டெஸராக்டை ஏன் திருடினான் என்று?

இப்போது நிக் ஃப்யூரியின் ஒரே நம்பிக்கை - இதற்கு முந்தைய படங்களின் கடைசி ஸீன்களிலெல்லாம் யாரிடமெல்லாம் பேசினாரோ, அந்த ஹீரோக்களை ஒன்றுதிரட்டுவதே. இந்த அத்தனை ஹீரோக்களுக்கும், இந்த டெஸரக்டுடன் அனுபவம் இருக்கிறது. அதனைக் கடலின் அடியிலிருந்து கண்டுபிடித்தவனே டோனி ஸ்டார்க்தான்.

அதுதான் - அவர்கள்தான் - The Avengers.


இந்தப் படத்தில், நான் ஏற்கெனவே சொல்லியபடி, நான் எதிர்பார்த்தது மெகா ஸிஜி அல்ல. ஒவ்வொரு ஹீரோக்களைப் பற்றியும் தெரிந்திருந்ததால், இந்த ஹீரோக்கள் எப்படி ஒருவரோடொருவர் பழகுகிறார்கள் என்றே பார்க்க விரும்பினேன். இந்த உறவுமுறையில் கவனம் செலுத்தியிருந்தால் மட்டுமே இப்படம் வெற்றிபெறும் என்றும் எண்ணினேன். காரணம், வெறும் ஸிஜி, சண்டைகள் போன்றவற்றால் ஒரு படம் வெற்றிபெற முடியாது அல்லவா? உணர்ச்சிகளைத் தூண்டவேண்டும். Conflict - அதுதான் திரைக்கதையின் மூலாதாரமாக இருக்கவேண்டும் என்றுதான் ஸிட் ஃபீல்ட் திரும்பத்திரும்ப சொல்லிவருகிறாரே?

நான் என்ன நினைத்தேனோ, அதைவிடவும் அருமையாக இவ்விஷயத்தில் வீடனும் பென்னும் புகுந்து விளையாடிவிட்டனர்.

படத்தில் காண்பிக்கப்படும் முதல் அவெஞ்சர் - Black Widow நடாஷா ரொமனாஃப் (ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்). லோகி டெஸராக்டுடன் தப்பித்த மறுகணம் இவளைத் தொலைபேசியில் அழைக்கும் நிக் ஃப்யூரி, உடனடியாக ஹல்க்கைத் தேடிப்பிடித்து அழைத்துவருமாறு ஆணையிடுகிறார். அதேசமயம், டோனி ஸ்டார்க்கைத் தேடிச் செல்கிறார் ஏஜெண்ட் கால்ஸன் (முந்தைய அவெஞ்சர் படங்களிலெல்லாம் கௌரவ வேடத்தில் வருபவர்). ஹல்க் என்ற பெயரைச் சொல்லாமல், Monster என்ற பெயரையே ஃப்யூரி சொல்கிறார். உடனே, அது டோனி ஸ்டார்க் என்று எண்ணும் நடாஷாவைத் திருத்தி, ’நிஜ மான்ஸ்டர்’ என்று ஃப்யூரி சொல்லிய அந்தக் கணத்தில், தியேட்டரில் விசில் அடி பின்னியது. ரஜினி படத்தில் ரஜினியின் இண்ட்ரோவில் எப்படி கரகோஷம் இருக்குமோ அப்படி.

அடுத்ததாக நாம் பார்க்கும் சூப்பர்ஹீரோ, டோனி ஸ்டார்க் (சற்றே அளவில் குறைந்த கரகோஷம்). விஷயத்தை கால்ஸனிடமிருந்து தெரிந்துகொள்ளும் ஸ்டார்க், தனக்கேயுரிய அலட்சியத்துடனும் கர்வத்துடனும் ஒத்துக்கொள்கிறார். அதன்பின் நாம் பார்ப்பது, கேப்டன் அமெரிக்கா. இவரிடம் ஃப்யூரியே சென்று விஷயத்தை சொல்கிறார். அதன்பின், கல்கத்தாவில் (யெஸ்) ஏழைகளுக்கு உதவி, காலம் கழித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானி ப்ரூஸ் பேனர்ஸை (ஹல்க்) காண்கிறோம். நடாஷாவின் வற்புறுத்தலின் பேரில், அவரும் சம்மதிக்கிறார்.

நிக் ஃப்யூரியின் வசம், பிரம்மாண்டமான ஒரு பறக்கும் வஸ்து (Helicarrier) இருக்கிறது. இந்த வஸ்துவில் ப்ரூஸ் பேனர்ஸும் கேப்டன் அமெரிக்காவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்கின்றனர். அங்கே, லோகி ஜெர்மனியில் இருப்பதாகவும், தனது வேற்றுக்கிரக பாதை அமைக்கும் முயற்சிக்குத் தேவையான இரிடியம் திருட முயற்சிப்பதாகவும் தெரிந்துகொள்ளும் ஃப்யூரி, அவனைப் பிடிக்க கேப்டன் அமெரிக்காவை அனுப்புகிறார்.

கிட்டத்தட்ட லோகியைப் பிடித்தேவிடும் கேப்டன் அமெரிக்காவுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. திடும்மென வானத்தில் இருந்து வந்து இறங்கும் IronMan (அயர்ன்மேனின் முதல் அறிமுகம். மிக பலத்த விசில் மற்றும் கரகோஷம்). எப்படியோ இந்தக் கூட்டணி லோகியைப் பிடித்துக்கொண்டு திரும்பும்போது, வானில் பலத்த இடி (புரிந்திருக்குமே). தோரின் அறிமுகம்.

அதன்பின் நான் எதிர்பார்த்தபடியே ஒவ்வொரு ஹீரோவும் மற்றவர்களுடன் இணைய மறுத்து, ஈகோ வெளிப்பாட்டில் அடித்துக்கொள்கின்றனர் (நிஜமாகவே). இக்காட்சிகள் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்பின் இந்த எல்லா ஹீரோக்களும் மனம் திருந்தி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணையும் காட்சி, வழக்கப்படி ஒரு மரணத்தால் சாத்தியப்படுகிறது.

இப்படத்தின் க்ளைமேக்ஸ் போன்ற ஒரு பயங்கர பிரம்மாண்டமான க்ளைமேக்ஸ், இதுவரை நான் பார்த்ததே இல்லை. பின்னே? மொத்தம் ஆறு சூப்பர்ஸ்டார்கள். இவர்களுக்கு இணையான வாய்ப்பு தரவேண்டாமா? மிரட்டுகிறது இப்படத்தின் க்ளைமேக்ஸ். க்ளைமேக்ஸ் மட்டுமன்றி, படத்தில் அவ்வப்போது இந்த ஹீரோக்களின் ஈகோ வெளிப்படும் காட்சிகள் அத்தனையும், மிக மிக நகைச்சுவையாக, எளிதில் புரிந்துகொள்ளும் அளவு எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் ஆடியன்ஸ் கரகோஷம் செய்வதை வைத்தே இப்படிச் சொல்கிறேன்.

படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை, வந்த ஒவ்வொரு காட்சியிலும் அட்டகாசமான வரவேற்பு பெற்ற ஹீரோ யார் என்று நினைக்கிறீர்கள்? நான் ஆரம்பத்தில் IronMan தான் அப்படியொரு வரவேற்பு பெறுவான் என்று நினைத்தேன். ஆனால், ஐயர்ன்மேனை பின்னுக்குத் தள்ளி, பெருவாரியான வரவேற்பு பெற்றது - ஹல்க் !

இப்படத்தில், ஒவ்வொரு சூப்பர்ஹீரோவுக்கும் ஈக்வலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். அதேபோல், ஒவ்வொரு ஹீரோவின் சிறப்பு அம்சத்தையும் அட்டகாசமாக வெளிக்காட்டியுள்ளனர் (உதா: கேப்டன் அமெரிக்கா, மனித தாங்கும் சக்தி மற்றும் அத்லெடிக் அக்ரோபேடிக்ஸின் உச்சம். அவர் ஸ்டண்ட் செய்யும்போதெல்லாம் அது கச்சிதமாக வெளிப்படுகிறது. அதேபோல், அவரது பன்ச் மூவ்மென்டான கேடயத்தை எறிந்து அது எதிரிகளைத் தாக்கிவிட்டு திரும்பும் மூவ்). இப்படி ஒவ்வொரு ஹீரோவின் ஸ்பெஷாலிடியும் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, க்ளைமேக்ஸில் ஹல்க்கின் அற்புதமான இரண்டு மெகா ஷாட்கள் இருக்கின்றன. சொல்லமாட்டேன். நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தப் படத்தின் அடுத்த பாகம் கட்டாயம் வந்தே தீரும். அதேபோல், இதுவரை வந்த அத்தனை அவெஞ்சர் படங்களைப் போலவே, இதிலும் டைட்டில்களுக்குப் பின் ஓடும் ஒரு சிறிய காட்சி உண்டு. அதில்தான் இரண்டாம் பாக மெகா வில்லன் அறிமுகம். அவெஞ்சர் காமிக்ஸின் இன்றியமையாத வில்லன்களில் ஒருவனான அவனது பெயர் -Thanos.  இவனைப் பற்றி இரண்டாம் பாகத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தைப் பற்றிய எனது இறுதிக் கருத்து - படம் அட்டகாசம் ! The movie is worth the wait.

BY

Ctrl+C & Ctrl+V