Thursday, 8 November 2012

மாயா இன மக்களும் உலக அழிவும்-1




இன்னும் ஒரிரு மாதங்களில், 2012ம் ஆண்டு புதுவருடமாகப் பிறக்கப் போகிறது. இந்த நேரத்தில், பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால், அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது' என்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
 
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.
இது பற்றி அறிவியலாகவும், அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும், ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால், எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.
அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்? இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களா? அப்படிச் சொல்லியிருந்தால், என்னதான் சொல்லியிருப்பார்கள்? அதை ஏன் நாம் நம்ப வேண்டும்? இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.
இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
 
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும், ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்து, அவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்? திகைத்துப் போய்விட மாட்டீர்களா? ஆச்சரியத்துக்கும், மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?
சரி, அதுவே ஒரு வீடாக இல்லாமல், உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால், ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?
ஆம்....! வரலாற்றில் இது நடந்தது. ஒரு நாட்டில் வாழ்ந்த, மிக மிக மிகச் சிறிய அளவினரை விட, மற்ற அனைத்து மக்களும், திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள். சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும், மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.
 
ஏன் மறைந்தார்கள்? எப்படி மறைந்தார்கள்? என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டு, மாயமாய் மறைந்து போனார்கள். எங்கே போனார்கள்? எப்படிப் போனார்கள்? யாருக்கும் தெரியவில்லை. எதுவும் புரியவில்லை.
இந்த மறைவின் மர்மத்தை ஆராய, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள். மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.
அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில், இவை உண்மையாக இருக்கவே முடியாது, என்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தன. அவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.
இது சாத்தியமே இல்லாத ஒன்று. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்க, பலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானா? என நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.
 
சரி, அப்படி என்னதான் நடந்தது? ஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்? ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?

சரி, அப்படி என்னதான் நடந்தது? அங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?   அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர், வேறு ஒரு தளத்தில் நடந்த, வேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன்.
இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும், மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.  
 இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.
இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம், அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்' என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.   அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.
ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.  
ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?  
ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.   அந்தப் படம் இதுதான்........!  
 
  
"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல" என்று சொல்வார்களே, அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?  
இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு, அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?   ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.
சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.  
அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.  
அவை என்ன தெரியுமா……..?  
மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.
அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.   என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.
உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.  
 



ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…?  
நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும், அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. அது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.
மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான். அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும், அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.  
சரி, இது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்கு, அவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.  



அந்தச் சித்திரத்தை மிகச் சரியாக உற்று நோக்கிப் பாருங்கள். அதில் ஒரு ஒழுங்கு முறையையும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இல்லாத அமைப்பையும், காட்சியையும் அது கொண்டிருப்பது, நிச்சயம் எமக்குத் தெரிகிறது. எதுவுமே இல்லாத ஒரு காலத்தில், எதையும் பார்க்காத ஒன்றை வைத்து இப்படி ஒரு  கலை வடிவைப் படைக்கும் சாத்தியம் அக்காலங்களில் இருந்ததாகத் தெரியவில்லை. அத்துடன் இந்தச் சித்திரம் மாயன்களால் கட்டப்பட்ட 'பிரமிட்' (Pyramid) வடிவக் கட்டடங்களுக்குக் கீழே இருந்த ஒரு சுரங்கத்தில், பாதுகாப்பாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது  (இந்தப் பிரமிட்டுகள்தான் எமக்கு மாயன்கள் பற்றிய ஆச்சரியங்களைப் பின்னர் கொடுக்கப் போகின்றன).


 அந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்ட பிரமிட்டை மேலேயும், அதன் சுரங்கவழியைக் கீழேயும் தந்திருக்கிறேன். இதைப் பார்க்கும்போது, மாயாக்கள் இந்தச் சித்திரத்துக்குக் கொடுத்த முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும்.


 


"அதெல்லாம் சரிதான். இது ஒன்றை வைத்துக் கொண்டு மாயாக்களுக்கும், ராக்கெட்டுக்கும் சம்பந்தம் உண்டு என்று, எப்படி முடிவெடிக்க முடியும்" என்னும் கேள்வி சுலபமாக எமக்குத் தோன்றுவது இயல்புதான். ராக்கெட்டுடன் சம்பந்தம் என்றால், அப்புறம் விண்வெளிதானே! இதற்கெல்லாம் சாத்தியம் என்பதே கிடையாது என்று அடித்துச் சொல்லும் உங்கள் மனது. அதனால் மாயன்கள் வாழ்ந்த இடங்களில் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த இவற்றை முதலில் பாருங்கள். நவீன வின்வெளிப் பிரயாணியின் படத்துக்கும், மாயாக்களின் மற்ற இரண்டு படங்களுக்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பாருங்கள்.






இத்துடன் இவை முடிந்து விடவில்லை. மாயன்களின் ஆச்சரியங்கள் எம்மைத் தொடர்ந்தே தாக்குகின்றன. அந்த ஆச்சரியங்களை நான் சொற்களால் வடிப்பதை விடப் படங்களாகவே உங்களுக்குத் தந்தால்தான், அதிகமான விளக்கங்கள் உருவாகும்.
'ஆயிரம் வார்த்தைகள் சொல்லும் கருத்தை ஒரு காட்சி சொல்லிவிடும்' என்பார்கள். அதனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக, நான் படங்களைத்தான் இனி அதிகமாகத் தரலாம் என நினைக்கிறேன்.
மாயன் கட்டடங்களை மேலும் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மாயன் பிரதேசமான மத்திய அமெரிக்காவில், அடுத்ததாக ஒன்றைக் கண்டதும் வெலவெலத்தே போய்விட்டனர். அவர்கள் ஏன் வெலவெலத்தனர் என்று நீங்கள் நினைக்கலாம். அவர்கள் எதைக் கண்டெடுத்தார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.
 

இந்தப் படத்தைத் தனியாகப் பார்த்தால் உங்களுக்குப் புரிவதற்கு சற்றுக் கடினமாக இருக்கலாம். எனவே, ஒரு நவீன விண்கலத்தில் நெருப்பைக் கக்கும் கீழ்ப்பகுதியையும், இந்தப் பொருளையும் சற்று ஒப்பிட்டுத்தான் பாருங்கள்.



இவற்றையும் தற்செயலென்றே நாம் வைத்துக் கொள்வோம். மாயன் சமூகத்தினர் எதையோ செய்து வைத்திருக்க, நான் அதை ராக்கட்டுடன் (Rocket) ஒப்பிட்டு சும்மா தேவையில்லாமல் பீதியைக் கிளப்புகின்றேன், அறிவியல் பற்றிப் பேசுவதாகச் சொல்லிவிட்டு ஒட்டுமொத்தமாக மூட நம்பிக்கையை வளர்க்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம்.
ஆனால் அடுத்து அகப்பட்டவை, எல்லாவற்றையும் அடியோடு தூக்கிச் சாப்பிட்டது. அதைப் பார்ததும் நான் சொல்வதில் ஏதும் உண்மை இருக்கலாமோ என்றும் நீங்கள் நினைப்பீர்கள். ராக்கெட்டைப் படமாக வரைந்திருப்பவர்கள் அதில் பயணம் செய்தவர்களையும் படமாக வரைந்துதானே இருக்க வேண்டும்.  இப்போது இந்தப் படங்களையும்  பாருங்கள். இது ஒரு தற்கால, விண்வெளிக்குச் செல்லும் நவீன மனிதனின் படம்.


இவை மாயன்களிடம் இருந்து பெறப்பட்ட வடிவங்கள்............!








இதற்கு மேலும் நான் இந்த விண்வெளி உடை போன்ற தோற்றத்துடன் படம் போடத் தேவையே இல்லை என்றே நினைக்கிறேன். இந்தப் படங்களே உங்களுக்குப் பல செய்திகளை விளக்கியிருக்கும்.
 மாயா சமூகத்தினரின் கலாச்சாரத்தை ஆராயும்போது  கிடைத்த ஓவியங்கள், சிலைகள் போன்றவற்றில், நவீன விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான பலவற்றைக் காணக் கூடியதாக இருந்தது என்னவோ உண்மை. அவை உண்மையிலேயே விண்வெளி சம்பந்தமானவைதானா? அல்லது வேறு அர்த்தங்கள் உள்ளனவா  என்னும் கேள்வி தொடர்ந்து எமக்குத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இது விண்வெளி சம்பந்தமானதுதான் என்றால்,  அதற்கு இதுவரை நான் கொடுத்த சாட்சியங்கள் போதுமானவைதானா? அட, எப்பவும் விண்வெளி உடையிலேயே இருக்கிறீர்களே, வேறு எதுவுமேயில்லையா? என்கிறீர்களா!
சரி, இப்பொழுது இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, இது எப்படிச் சாத்தியம் என்று சொல்லுங்கள். இவை எதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்ல முடிகிறதா...?
 

   
பறவைகளா? பூச்சிகளா? இல்லை மீன்களா? அல்லது................!
ஆகாய விமானங்களா....?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்........!
பூச்சிகள், பறவைகள், மீன்கள் என்றால், அந்த நடுவே இருக்கும் உருவத்தில், எப்படிக் காற்றாடி போன்ற அமைப்பு வந்தது? என்ன தலை சுற்றுகிறதா.....?  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட, தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த  உருவங்கள் சொல்லும் உண்மைகளை நாம் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால், மேலும் பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த உண்மைகள் இவற்றை விடக் கனமானவை.




 

மேலே உள்ள படத்தில் இருக்கும் இந்த மாயா இன மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இந்தப் படத்தைப் பார்க்கும் போது, ஏதோ வித்தியாசமாகவும், ஆச்சரியமாகவும் உங்களுக்கு இருக்கும். அது என்னவாக இருக்கும் என்னும் பிரச்சினையை உங்களிடமே விட்டுவிட்டு நான் தொடர்கிறேன்.......!

இதுவரை, 'ரைட் சகோதரர்கள்' விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அவற்றைப் புறம் தள்ளும் பல இரகசியங்கள் எங்கோ ஒரு மூலையில், மத்திய அமெரிக்காவில், எப்போதோ மறைந்திருக்கின்றது என்பது ஆச்சரியம்தானே! அதைவிட ஆச்சரியம், இந்தச் சிறிய விமானங்கள் போலுள்ளவற்றை விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, அவை விமானப் பறப்புச் சக்திக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது என்பதைக் கண்டு கொண்டார்கள். ரைட் சகோதரர்கள் கண்டு பிடித்த விமானம் கூட மிகப் பழமை வாய்ந்தது. ஆனால், இந்த உருவங்கள் நவீன விமானங்கள் போல வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.  
இதுவெல்லாம் எப்படிச் சாத்தியம்? விஞ்ஞான அறிவையும், விண்வெளி அறிவையும் மாயா இனத்தவர் பெற்றது எப்படி? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுவாசிகள் போல வாழ்ந்த மக்கள், எப்படி இவ்வளவு அறிவைக் கொண்டிருக்க முடியும்?  இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலாக, நாம் உடன் புரிந்துகொள்ளக் கூடியது,  விண்ணிலிருந்து மாயன் இனத்தவரை நோக்கி யாராவது வந்திருக்க வேண்டும் என்பதும், அவர்கள் மூலமாக மாயா இனத்தவர்களுக்கு இந்தளவுக்கு அறிவு கிடைத்திருக்க வேண்டும் என்பதும்தான். அப்படி இல்லையெனில், ஒன்றுமே இல்லாத ஒன்றுக்கு இவ்வளவு ‘பில்டப்‘பை நான் கொடுப்பதாகவும் இருக்கலாம்.  
ஒருவேளை விண்வெளியில் இருந்து அயல்கிரகவாசிகள் வந்திருந்தால், அவர்களை மாயாக்கள் பதிவு செய்திருப்பார்கள் அல்லவா? அப்படியானால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள்? 'ஏலியன்' என்று அழைக்கப்படும் அயல்கிரகவாசியின் வினோத தலையுடன் உள்ள உருவங்களை எத்தனை படங்களில்தான் நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்ட உருவங்களை மாயன்களும் பார்த்திருப்பார்களோ?  
ஆம்! அதற்கு சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுவது போல மாயன் உருவாக்கிய வடிவங்கள் சில உள்ளன.  அவற்றை நீங்களே பாருங்கள்.......!  
 

இந்த உருவங்களைப் பார்த்தீர்கள் அல்லவா? இவை அயல்கிரகவாசிகளின் உருவம்தான் என்றால், அவர்கள் மாயன்களிடம் மட்டும்தான் வந்திருக்க வேண்டுமா...?  இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் மாயன் இனத்தவருக்கு மட்டும்தான் ஏற்பட்டதா அல்லது வேறு யாருக்காவது ஏற்பட்டதா? அப்படி வேறு இனத்தவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதா எனப் பார்க்கும் போது, அங்கும் எமக்கு ஆச்சரியங்களே காத்திருந்ததன.  
பிரபலமான எகிப்திய பிரமிட்களை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பல மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கிய உலக அதிசயமாகப் பார்க்கப்படுவது இந்தப் பிரமிட்கள். இந்தப் பிரமிட்கள் என்றாலே எமக்குத் தோன்றுவது பிரமிப்புத்தான்.  
எகிப்தியப் பிரமிட்களில் இருந்த சித்திர வடிவ எழுத்துகளை ஆராய்ந்த போது அங்கு கிடைத்ததும் அதிர்ச்சிதான்.  
அப்படி என்னதான் இருந்தது?  
கொஞ்சம் மூச்சை அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்............!  
இப்போ இவற்றைப் பாருங்கள்..........!!  

 

என்ன உங்களால்  நம்பமுடியவில்லையல்லவா? சினிமாப் படங்களில் வருவது போன்று, அதே வடிவிலான உருவம். ஆச்சரியமாக இல்லை அல்லது சினிமாப் படங்களில் இவற்றைப் பார்த்துதான் ஏலியன் உருவங்களை உருவாக்கினார்களா?
  சரி, இதுக்கே அசந்தால் எப்படி? இன்னும் இருக்கிறது பாருங்கள்.  




மேலே காட்டப்படிருக்கும் இரண்டு படங்களிலும் உள்ள வித்தியாசமான தலைகளுடன் கூடிய மனிதர்களைக் கவனியுங்கள். அப்படி உருவத்துடன் ஒப்பிடக்கூடிய எந்த ஒரு எகிப்தியரும் இருந்திருக்கவில்லை என்பதுதான் இங்கு ஆச்சரியம். மனித இனத்தின் தலையானது அன்று முதல் இன்று வரை சில குறிப்பிட்ட பரிமாணங்களைக் கொண்டதாகவே கூர்ப்படைந்து வந்திருக்கிறது. அது தாண்டிய எதையும் மனிதனாக எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் பின்னால் நீண்டதாகக் காணப்படும் இத்தலையுள்ள உருவங்கள் எம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.  
இப்போது நான் தரும் இந்த உருவத்தைப் பாருங்கள்.........!  
 
எகிப்திய மன்னன் பாரோ அகெனாட்டன் (Pharaoh Akhenaten) என்பவனின் மனைவி இவள். மகாராணி. இவள் வாழ்ந்த காலம் கி.மு.1370 இலிருந்து கி.மு.1330. இவள் பெயர் ‘நெபர்டிடி‘ (Nefertiti). இவளைப் பற்றி இங்கு ஏன் நான் சொல்கிறேன் என்று யோசிப்பீர்கள். காரணம் உண்டு.  
இவளது தலைக் கவசம் இல்லாத சிலை ஒன்று கண்காட்சிச் சாலையில் இருக்கிறது. அது இதுதான்.  
 
இவளது தலை ஏன் இவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? எகிப்திய வரலாற்றில் நெபர்டிடியின் சரித்திரம் மர்மம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இவள் அயல்கிரகத்தில் இருந்து வந்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா...?  
சரி, நெபர்டிடியின் தலை கொஞ்சம் பெரிதென்றே நாம் வைத்துக் கொள்ளலாம். இவளுக்கும் ஏலியனுக்கும் சம்பந்தம் இல்லையென்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் நெபர்டிடியும் அவளது கணவனும் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் இந்தச் சித்திரத்தைப் பார்த்ததும் அந்த நம்பிக்கையும் அடியோடு தகர்ந்து விடுகிறதல்லவா?  
 
இவை எல்லாவற்றையும் விட்டுவிடலாம். எதுவுமே இல்லாததை நாங்கள் என்னென்னவோ சொல்லி மாற்றிவிடுகிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் இந்தப் படம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா..?  
 
இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள். சரி, கொஞ்சம் பெரிதாக்கிப் பார்க்கலாம்.  
 
விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் படத்தில் தெரிகிறதா...? அதன் அளவு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதை அதன் அருகே இருக்கும் மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  
அடப் போங்கப்பு....! சும்மா கூராக இருப்பதெல்லாம் உங்களுக்கு ராக்கெட்டா என்று கேட்கத் தோன்றுகிறதா?  
சரி, அப்போ, இதையும் பாருங்கள்........!  
 
இந்தக் காலத்தில் இருக்கும் அனைத்து விதமான விமானங்களும் அடங்கிய ஓவியம் இது. தலையே சுற்றுகிறதா..?  

மாயா இன மக்களும் உலக அழிவும்-2

No comments:

Post a Comment