Thursday, 4 April 2013

பிரிவு

"என்ன இது?"

"எது?"

"இதான்"

"தண்ணி"

"அதான் ஏன் கீழ சிந்தியிருக்கு?"

"கை கழுவினேனா அதான்...."

"கை கழுவினா டவல் யூஸ் பண்ணுங்க இப்படி கைய ஓதராதீங்கனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்"

"எத்தன வாட்டி சொல்லி இருக்க? சாரிம்மா கவுன்ட் பண்ணல"

"என்னை பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு?"

"வேண்டாம்... சொன்னா திட்டுவ" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"என்னங்க... இன்னிக்கி கோயிலுக்கு போலாமா?"

"ஏன்? திடீர்னு?"

"ஆண்டவா... எதுக்கு எடுத்தாலும் ஏன் ஏன் ஏன்... பதில் சொல்லி எனக்கு சலிச்சு போச்சு... ஒரு நாளாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க... திருப்பி கேள்வி கேக்காதீங்க ப்ளீஸ்"

"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?"

"அந்த கவலை பிரைன் இருக்கறவங்களுக்கு தானே வரணும்"

"கரெக்ட்... அது இருந்துருந்தா உன்கிட்ட சிக்கி இருப்பனா" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"பதினஞ்சு நாள்... தனியா சமாளிச்சுக்குவியா?"

"ம்"

"நேரத்தோட வீட்டுக்கு வா? இப்ப சாயங்காலமானா மழை வேற வந்துருது"

"ம்"

"தூங்கறப்ப பக்கத்துல போன் வெச்சுக்கோ"

"ம்"

"ஒழுங்கா சாப்பிடு... கேக்கறது ஆள் இல்லைனு ஏமாத்தாத"

"ம்"

"ஏய்... ஏன் உம்முன்னு இருக்க?"

"ஒண்ணுமில்ல"

அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன், "இதுக்கு தான் சொன்னேன்... உனக்கும் லீவ் கிடைக்கறப்ப ஊருக்கு போலாம்னு"

"அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே" என்றாள் எரிச்சலாய்

"கடன்காரன் கடன் தான் குடுப்பான், லீவ் கூடவா குடுப்பான்" என கேலியாய் அவள் மனதை திசை திருப்ப முயன்றான்

"ஜோக்கா, ஈ... சிரிச்சுட்டேன் போதுமா?" என்றாள் சற்றே கோபமாய்

"சிரிச்சியா... மொதலே சொல்லிடு... பயமா இருக்கில்ல" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள்

உடை மாற்றி சமையல் அறைக்குள் வர, ஒரு தூசு கூட இல்லாத தரை அவளுக்கு ஏனோ உறுத்தியது

அந்த நிசப்த நொடியில் கேட்ட டெலிபோன் மணி சத்தத்தில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள்

"ஹலோ"

"நான் தான்... என்ன பண்ணிட்டு இருக்க?"

"......." அவன் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்க அமைதியாய் நின்றாள்

"ஹலோ... ஹலோ"

"ம்"

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல" என்றவளின் குரல் காட்டி கொடுத்தது

"தனியா போர் அடிக்குதா?"

"ம்"

"ஒரு வாரம் ஓடி போச்சு... இன்னும் ஒரே வாரம்... வந்தர்றேன், சரியா?"

"ம்"

சற்று நேரம் பேசியபின் "சரிடா... நான் வெக்கறேன்"

"ஏன்?"

"எப்பவும் நான் தான் ஏன் ஏன்னு கேள்வி கேப்பேன்... இன்னைக்கி நீ கேக்கற" என அவன் சிரிக்க, அவள் மௌனமானாள்

போனை வைத்ததும் அவள் தனக்கு தானே செய்து கொண்ட முதல் சங்கல்பம் "இனிமே அவர்கூட சண்டையே போடக்கூடாது" என்பது தான்

அன்றிரவு உணவருந்தி கை கழுவிய பின், பேப்பர் டவல் நோக்கி நீண்ட கையை பின்னுக்கு இழுத்தாள்

வேண்டுமென்றே தரையில் நீர் படும் படி கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்


***********************************

"என்னங்க இது? ஈர துண்டை அப்படியே மத்த துணிக கூட போட்டு வெச்சுருக்கீங்க?"

"...... " மௌனமாய் அவளை பார்த்தான்

"என்ன பார்வ?"

"...... " பதில் கூறாமல் முறுவலித்தான்

"ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு... இன்னும் சூட்கேஸ் எடுத்து உள்ள வெச்ச பாடா காணோம்"

"...... " சிரிப்புடன் அருகில் வந்தான்

"என்ன சிரிப்பு இப்போ? நான் என்ன ஜோக்கா அடிச்சேன்?"

"Now I know...Why I missed you so much?" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். பின் அவளும் சிரித்தாள.

தங்கமணி 

No comments:

Post a Comment