Wednesday, 23 May 2012

மீசைக்கார அப்பா


பிறப்பு:கல்கி இதழ்

ப்பா இறந்த செய்தி செல்விக்கு இரவு பனிரெண்டு மணிக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. செல்வியின் வீட்டில் தொலைபேசி இல்லை. செல்வியின் பக்கத்து வீட்டுக்கு, செல்வியின் அண்ணன் தகவல் சொன்னான்.

"ஸாரி மேடம். நேரங் கெட்ட நேரத்துல எழுப்பினதுக்கு. நான் செல்வியின் அண்ணன். அப்பா தவறிட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னே ஹார்ட் ஃபெயிலியர் ஆயிடுச்சு. தயவு பண்ணி சொல்லிடுங்க..." என்று சொல்லிவிட்டு டெலிபோனை வைத்து விட்டான்.

பத்மாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. செல்வியின் அப்பாவை அவளுக்கு நன்றாக தெரியும். செல்விக்கு அப்பா என்றால் உயிர். எப்போதும் "அப்பா... அப்பா" என்று தகப்பனாரை பற்றிய பேச்சு தான்.

"இந்த பெண்ணுக்கு அப்பாவின் மீது இத்தனை ஈர்ப்பா" என்று வியப்பாள். பத்மா தன் அப்பாவோடு அதிகமாக பேசியதில்லை. வயசுக்கு வருவதற்கு முன் பேசியதோடு சரி. சடங்கான பிறகு பத்மா, அப்பாவோடு பேச கூச்சப்படுவாள், பயப்படவும் செய்வாள். அப்பாவும் கெத்தாக இருப்பார். சகஜமாக பேசமாட்டார். அப்பா என்றாலே பத்மாவுக்கு ஒரு விதமான அச்சமே. ஆனால் இந்த செல்வி எதற்கெடுத்தாலும் அப்பா அப்பா என்று மாய்ந்து போகிறாள்" என்று வியப்பாள்.

செல்விக்கு சொந்த ஊர் மதுரை. இங்கே ராஜபாளையத்தில் மணம் முடித்து இருக்கிறார்கள். செல்வியின் அப்பா சப்-இன்ஸ்பெக்டர். செல்வியை பார்க்க வருவார். ஊருக்கு போகும்போது செல்வி அப்பாவை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று வழி அனுப்பி விட்டு தான் வருவாள். "எங்க அப்பாவை மாதிரி யாரும் இல்லை" என்பாள்.

"பெருமையாக எப்பவும் அப்பா புராணம் பாடுறியே. உன் புருஷனுக்கு கோபம் வராதா?" என்று கேட்பாள் பத்மா.

"வரும்" என்று சிரிப்பாள்.

பத்மாவுக்கு அச்சமாக இருந்தது. "சாவு தகவலை எப்படி சொல்வேன்? செல்வி தாங்குவாளா? அப்பால் என்றால் உயிராயிற்றே". அம்மா எல்லாம் சும்மா. எனக்கு அப்பா தான் எல்லாம்" என்பாளே.


தவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அப்போது தான் ஞாபகம் வந்தது. செல்வியின் கணவர் வேலை நிமித்தமாய் வெளியூர் சென்றிருப்பது. செல்வியின் கணவர் விற்பனைப்பிரதிநிதியாக இருக்கிறார். செல்வியின் வீட்டுக் கதவை தட்டினாள். எழுந்து வந்து கதவை திறக்க கொஞ்சம் நேரம் ஆயிற்று. கதவு அருகே நின்றப்படியே கதவை திறக்காமல் "யாரு... யாரு..." என்று இரண்டு தடவை கேட்டாள் செல்வி.

"நான் தான் பத்மா வந்திருக்கேன்"

"என்னக்கா?" செல்வி கேட்டாள். இரண்டு பேருக்கும் ஒரே வயசு தான். இருந்தாலும் பத்மா இரண்டு குழந்தைகளை பெற்று விட்டதால், பத்மாவை அக்கா என்று தான் அழைப்பாள். "முக்கியமான விஷயம். கதவை திற" என்றாள்.

செல்வி கதவை திறந்தாள். "உள்ளே வா" என்று செல்வியை இழுத்து கொண்டு உள்ளே வந்தாள். "என்னக்கா?"

எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்தாள். "என்னக்கா?"

"உங்கப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம். ரெம்ப சீரியஸாம். ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்காங்களாம். உன்னை உடனே வர சொல்லி உங்க அண்ணன் போன் பண்ணினார்"

"அண்ணன் போன் பண்ணுச்சா? அப்பாவுக்கு என்னாச்சு? வேறே என்ன சொல்லுச்சு அண்ணே " பதறினாள் செல்வி.

"ஹார்ட் அட்டாக்காம். உடனே வரச் சொன்னாங்க" என்றாள் பத்மா.

"அய்யோ அக்கா... அவரும் ஊருல இல்லையே. என்ன பண்ணுவேன். அக்கா உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி நீங்க எனக்கு துணைக்கு வாங்க. அவர் வந்ததும், உங்க வீட்டுக்காரர் தகவல் சொல்லட்டும். வாங்கக்கா, நான் அப்பாவை பார்க்கணும்" என்று அழத் துவங்கிவிட்டாள்.

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை" என்று சொன்னதற்கே இத்தனை அழுகை என்றால் - இறந்தது தெரிந்தால். அய்யோ கடவுளே. இவள் என்னை வேறு கூப்பிடுகிறாள். நான் வர மறுத்தால் இவள் இங்கேயே இருந்து விடக்கூடும். செல்வியை அழைத்து கொண்டு புறப்பட்டாள்.

பத்மாவின் கணவனே பஸ் ஸ்டாண்ட்வரை வந்து வழி அனுப்பினார்.

"பார்த்து போங்க. இரண்டு பொம்பளைங்களா போறிங்க. கவனம். பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி ஆட்டோவுல போகாதீங்க. நிலைமை சரியில்லை. டவுன் பஸ்லேயே போங்க. நைட் சர்வீஸ் பஸ் எப்போதும் உண்டு" என்று சொல்லி அனுப்பினார்.


"ப்பா ரெம்ப சிகரெட் பிடிப்பார். அதான் ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு" என்றாள். "அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது" என்று தனக்கு தானே பேசி கொண்டாள்.

பத்மாவுக்கு தன் அப்பா இறந்த நாள் ஞாபகத்துக்கு வந்தது. அப்பா தவறி விட்ட சேதியை, சுப்பையா சித்தப்பா தான் வந்து சொன்னார். ஏனோ தெரியவில்லை, இழப்பாக தெரியவில்லை. அழுதோமா என்று கூட ஞாபகம் இல்லை. அவர் இருந்த போது எந்த சந்தோஷமும் இல்லாமல் இருந்தது. இறந்த பின் எந்த வருத்தமும் இல்லாமல் போனது.

ஒரு தடவை செல்வி சொன்னாள். "அப்போ எனக்கு அஞ்சு, ஆறு வயசு இருக்கும். மீசைக்காரா னு கூப்பிடுவேன். அப்பா முத்தம் கொடுக்கும்போது மீசை குத்தும். அப்பா போலீஸ்காரராச்சே. கடா மீசை வைச்சிருப்பார். குத்துது... நீ முத்தம் கொடுக்காதேன்னு" அழுதேனாம். மறு நாளே அப்பா மீசையை எடுத்துட்டார். "மனுஷன் கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிட்டதும் தியாகம் பண்ண பழகிக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்வார். அப்பா எனக்காக செய்த முதல் தியாகம் மீசை"

செல்வி தன்னுடைய அப்பாவை பற்றி பேசும் போதெல்லாம், பத்மா தன் அப்பாவை நினைத்து பார்த்து கொள்வாள். அப்பா தனிபிறவி. பிள்ளைகள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை தன் வயிறு நிறைந்தால் போதும் என்று நினைப்பார்.

ஒரு தடவை நானும் அப்பாவும் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தோம். ஒரு மனிதர் கல் தடுக்கி கீழே விழுந்துட்டார். "நான் ஷேம் ஷேம்... பப்பி ஷேம்னு" சிரிச்சு குதிச்சேன். அப்பா கன்னத்துல அறைஞ்சிட்டார். அப்பா அந்த பத்து வயசு வரை அடிச்சதே இல்லை. இதுக்கு ஏன் அடிக்கணும். கீழே விழுந்தவர், "பரவாயில்லை. சின்னப்புள்ளை தானே. விடுங்க சார்" என்றார்.

ஆனா அப்பா என்னை இலேசுல விடல. புத்திமதி சொன்னார். பிறர் விழுவதை பார்த்து நாம் சிரித்தால், நாம் விழுவதை பார்த்து இன்னொருவன் சிரிப்பான். யாருக்கும் யார் மேலேயும் அனுதாபம் இல்லாமல் போயிடும். அப்புறம் மிருகங்களா தான் இருப்போம்னு சொன்னார். இதெல்லாம் பத்து வயசு பெண்ணுக்கு புரியுமான்னு அவர் நினைக்கலை. அப்புறம் ரோட்டுலயும் சரி, வாழ்க்கையிலும் சரி, யார் தடுக்கி விழுந்த போதும் நான் சிரிக்கலை. பல சமயம் தோணும். அப்பாவோட சுபாவத்துக்கும் அவர் உத்யோகத்துக்கும் சம்பந்தமே இல்லைன்னு. ஆனா இந்த மாதிரி சுபாவம் உள்ளவங்களும் போலீஸ் துறைக்கு தேவைன்னு நினைச்சுப்பேன்" என்றாள் செல்வி.


ஸ்ஸில் ஒயாமல் அப்பாவை பற்றி பேசி கொண்டே வந்தாள்.

 "அப்பா ஒரு சிறந்த கவிஞர். ஆனா அம்மாவுக்கு கழுதையை தான் தெரியும். கவிதைன்னா என்னன்னு தெரியாது. நான் கூட அம்மாவை திட்டுவேன். என்னம்மா இப்படி இருக்கே. அப்பாவை இன்சல்ட் பண்ற மாதிரி ஞான சூன்யமா இருக்கேன்னு. அப்பா மேலே பேச விடாம என்னை தடுப்பார். அவளோட சுபாவம் அது. அவ அப்படியே இருக்கட்டும். அப்படி அவ பாசாங்கு இல்லாம இருக்கிறது தான் எனக்கு பிடிச்சிருக்கு" என்பார்.

"எத்தனை அருமையான அப்பா. நிச்சயம் அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது" என்று கண்களை துடைத்து கொண்டாள்.

பத்மாவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. செல்வியை தன் தோளில் சாய்த்து கொண்டாள்.

"ஒரு சமயம் - நான் காலேஜ்ல படிக்கும்போது ஒரு பையனை லவ் பண்ணினேன். அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. படிச்சு முடி. பிறகு பார்த்துக்கலாம்னு சொன்னார். வேற ஒண்ணும் சொல்லல. கொஞ்ச நாளில் காதல் என்பது வெறும் மாயை என்று புரிஞ்சது. ஒரு வேளை அப்பா காச்சு மூச்சுன்னு கத்தி அடிச்சு, உதைச்சு இருந்தாருன்னா நான் அவன் கூட ஓடிப்போய் இருப்பேன்" என்று செல்வி சொன்னபோது பத்மாவுக்கு, தன் தகப்பனின் ஞாபகம் வந்தது.

பெண்கள் ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்த்தாலே அவ்வளவு கோபம் வரும் பத்மாவின் அப்பாவுக்கு..

"அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாதுலக்கா?"

"சீரியஸ்ன்னு சொன்னாங்க" என்று மழுப்பினாள்.

"சீரியஸ்னா என்ன, அப்பா பிழைச்சுப்பார். அப்பா பிழைச்சுப்பார். அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது. ரெண்டு மூணு தடவை ஹார்ட் அட்டாக் வந்தவங்களே பிழைச்சிருக்காங்க. எழுபது, எண்பது வயசுக்காரங்களே கல்லு மாதிரி இருக்காங்க. அப்பாவுக்கு ஐம்பத்தி மூணு வயசு தானே ஆகுது. அதுவும் எக்சர்சைஸ் பாடி. அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது" தனக்குள்ளாக புலம்பினாள்.

எப்படி தெரிவிப்பது. அங்கு போய் சேர்ந்த பின் அவளாக தெரிந்து கொள்ளட்டும்.


ஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது. மெள்ள இறங்கினார்கள். பத்மாவுக்கு மனசு பக்பக்கென்று அடித்து கொண்டது. செல்வியால் அப்பாவின் இழப்பை தாங்க முடியுமா? அந்த இரவிலும் நைட் சர்வீஸ் பஸ்ஸில் கூட்டமாய் தான் இருந்தது.

பஸ் பிடித்து வீடு வந்த சேர்ந்தபோது - பந்தல் போட்டு கொண்டிருந்தார்கள். வீட்டின் முன், வரிசையாய சேர்கள். மரப்பெஞ்சுகள்... மஞ்சள் பல்பு எரிந்து கொண்டிருந்தது.

செல்விக்கு புரிந்துவிட்டது.

"பொய் தானேக்கா சொன்னே. அப்பா தவறிட்டார்ல" பத்மாவின் தோளை பிடித்து கொண்டு பெருங்குரலெடுத்து அழுதாள்.

"அப்பா பிழைச்சுப்பார். உயிரோட இருக்காருன்னு நம்பி வந்தேன். அங்கேயே இறந்தது தெரிஞ்சிருந்தா அழுகையோடு போயிருக்கும். அப்பா உயிரோட இருக்காருன்னு நம்பி வந்து இப்ப ஏமாத்தமா போச்சு... அப்பா" நெஞ்சே வெடித்து சிதறிவிடுவது மாதிரியான அழுகை.

பத்மாவுக்கும் அழுகை வந்தது. தன் அப்பா இறந்த அன்று கூட வராத அழுகை.

No comments:

Post a Comment