பிறப்பு: சாவி இதழ்
நான் வெகு நேரமாய் அந்த பெட்டிக்கடையின்அருகிலேயே நிற்பதை பார்த்த கடைக்காரர் "என்னங்க வேணும்? யாரை பார்க்கணும்?" என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தேன்.
நான் அங்கு வந்து நின்று இருபது நிமிஷமாவது இருக்கும். இங்கிருந்து பார்க்கும்போது வீடு தெரிந்தது. வீட்டிற்கு போக பயமாய் இருந்தது. பயம் என்பதை விட வெட்கம் என்று சொல்லலாம். என் சுயநலத்தை எண்ணி நானே வெட்கிப் போனேன்.
கை, கால்கள் ஜில்லிட்டிருப்பது போல தோன்றியது. அப்படியே திரும்பி வீட்டிற்கு போய்விடலாமா என்று கூட எண்ணினேன். ஆனால் திரும்பி போய் என்ன செய்வது? அந்த சுவர்கள், ஜன்னல்கள்... பார்த்ததையே திரும்ப, திரும்ப பார்க்க மனசில் சோகம் தான் படியும். பைத்தியமே பிடித்துவிடும்.என்ன ஆனாலும் சரி. அப்பா, அம்மா யார் என்ன சொன்னாலும் சரி போவோம் என்று எண்ணிய படி தயக்கத்தை உதறி நடந்தேன். பழகிய தெரு தான் என்றாலும் நிறைய வித்தியாசப்பட்டு இருப்பது போல தோன்றியது - தன்னை போல.
மூன்றரை வருஷங்கள் இருக்குமா? தெருவே இப்போது ரெம்ப அன்னியப்பட்டு போனது போல தோன்றுகிறது. சின்ன வயசில் கிட்டி விளையாடிய தெரு, சைக்கிள் ஓட்ட கற்று கொண்ட தெரு. கொஞ்சம் பெரிசாய் ஆன பின் கிரிக்கெட் விளையாடிய தெரு, மீசை துளிர் விட ஆரம்பித்ததும் - நின்று பெண்களை ஆர்வமுடன் பார்த்த தெரு, பரிட்சை நாட்களில் தெருவிளக்கின் கீழ் அமர்ந்து நண்பர்களுடன் படித்த தெரு...
சினேகமாய் இருந்த தெரு -இப்போது யாரோவாக...
வீடு வந்துவிட்டது. வாசலில் கோலம். நடுப்பகல் ஆகியும் கலையாமல். கோபியின் மனைவி ஜெயந்தி போட்டிருக்க வேண்டும். முன்பு ஹேமா கோலம் போடுவாள்.
வீட்டிற்கு முன் நின்றேன். வீடு முன்பு போல தான் இருந்தது. ஆனால் வெள்ளையடித்து இருந்தார்கள். கோபியின் கல்யாணத்திற்கு அடித்திருக்க வேண்டும். கதவை தட்டி "அம்மா.. அம்மா.." என்று அழைத்தேன். அச்சமாய் இருந்தது. அச்சம் என்பதை விடக் கூச்சம் எனலாம்.
வெறுமனே கம்பிக்கதவு இழுத்து விடப்பட்டு இருந்தது. உள்ளே ஒரு குழந்தை என்னை பார்த்து, "அம்மா, யாரோ ஒரு மாமா வந்திருக்காங்க" என்றது. யாரோ ஒரு பெண்மணி - விருந்தினராக இருக்க வேண்டும், "யார் வேண்டும்? யார் நீங்க? யாரை பார்க்கணும்?" என்று கேட்டாள்.
இது என் வீடு. இங்கு இருப்பது என் தாய், தந்தை. ஆனால் இந்த பெண் என்னை யார் என்று கேட்கிறாள். கேட்டதும் நியாயம் தானே. இப்போது யாருமே எனக்கு சொந்தம் இல்லையே.
சப்தம் கேட்டு அம்மா"யார்" என்றவாறு எட்டிப் பார்த்தாள். அம்மாவை நேரிடையாக பார்க்க என்னால் முடியவில்லை. தலைகுனிந்து கொண்டேன்.
அம்மா"வாப்பா சிவா" என்று அழைத்தாள். உரிமை எடுத்து கொள்ள, அது போதாதா எனக்கு? உள்ளுக்குள் நுழைந்து செருப்பை கழட்டி போட்டு விட்டு அம்மாவின் கையை பிடித்து கொண்டு கதறி அழ ஆரம்பித்தேன்.
"சிவா... நீ செஞ்சது உனக்கு சரியா படலாம். ஆனா எங்களுக்கு. நீ எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து என் முன்னே நிக்கறே. நா என்ன பண்ண முடியும். நான் எதுவும் சொல்ற நிலையில் இல்லை. இப்பத்தான் உனக்கு வேலை கிடைச்சு ஆறு மாசம் ஆகுது. நீயும் என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். ஆனா நீ உன்னை மட்டும் பிரதானமா நினைச்சுக்கிட்ட""காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேங்கறே. உனக்கு பின்னால் தங்கை, தம்பி இருக்கிறதை மறந்துட்டே. சுயநலமா சிந்திக்க ஆரம்பிச்சிட்ட. பரவாயில்லை. சுயநலமா சிந்திக்கிறவனால் தான் முன்னுக்கு வர முடியும். நான் மற்ற தகப்பன்களை போல சாபங் கொடுக்க போறது இல்ல. எங்கேயாவது நல்லா இருந்தா சரி" என்றார் அப்பா. அப்பா இத்தனை பேசியதே பெரிசு. அதிகம் பேச மாட்டார். சந்தோஷமானாலும் சரி, துயரமானாலும் சரி - காட்டி கொள்ள மாட்டார். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அம்மா தான் கத்தினாள். "ஹேமாக்கு எப்படி கல்யாணம் ஆகும். நீ நல்லா இருந்துடுவியா" என்று கேட்டு நிறைய திட்டினாள்.
ஹேமா, கோபி, சுந்தர் மூவரும் வரிசையாய் நின்று என்னை வேடிக்கை பார்த்தனர். அவமானமாய் இருந்தது.
"சும்மா இரு கமலா. அவன் வழியை தேடிக்கிட்டான், அவனுக்கென்ன தலையெழுத்தா - நம்ம கூட இருந்து கஷ்டப்படணும்னு. உனக்கு ஒய்வே இல்லன்னு என் விதி சொல்லும்போது அத மாத்த முடியுமா, சரிப்பா. நீ போ சிவா. நீ நிக்க நிக்க அம்மா ரெம்ப திட்டுவா. குடும்பஸ்தன் ஆயிட்டே. பொண்டாட்டி காத்திருப்பா" என்றார்.
எனக்கு கஷ்டமாய் இருந்தது - அப்பாவை ரெம்ப கஷ்டப்படுத்துகிறோமே என்று. அப்பா ரெம்ப பிரயத்தனப்பட்டார். எனக்கொரு நல்ல வேலை கிடைத்தால் - தன் கஷ்டம் குறையுமே என்று. எனக்கு குடும்பத்தை துறக்க அவசரம் இல்லை. ஷோபனா வீட்டில் வரன் பார்த்து நிச்சயதார்த்தம் வரை சென்று விட - வேறு வழி தெரியவில்லை. மணந்து கொண்டோம்.
ஷோபனா வீட்டில் நடந்ததை கேட்டு சங்கடப்பட்டாள். "மாச மாசம் - வீட்டுக்கு பணம் கொடுத்துடுங்க" என்றாள்.
எனக்கு சரியாகப்பட்டது. ஆனால் வீட்டிற்கு போக சங்கடப்பட்டு, தெருவில் ஒரு நாள் அப்பாவை பார்த்து, வார்த்தைகளை கடித்து துப்பி - எப்படியோ சொல்லி பணத்தை கொடுத்தேன். அப்பா சிரித்தார். "இன்னும் பிச்சை எடுக்கிற அளவுக்கு என் நிலை தாழ்ந்து போகல. உழைச்சு சாப்பிட என் உடம்புல தெம்பு இருக்கு" என்றார்.
நானொரு முட்டாள். வீட்டிற்கு போக சங்கடப்பட்டிருந்தால் - ஓர்க ஷாப்புக்காவது போய் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நடு ரோட்டில் பேசி. அப்பா வாங்காமல் போய்விட்டார்.
ஆயிற்று. மூன்று வருஷங்கள். இடையில் தங்கை ஹேமா கல்யாணம். செல்லவில்லை. "தங்கை கல்யாணத்துக்கு ஒருவர் சொல்ல வேண்டுமா?" என்று ஷோபனா கடிந்து கொண்டும் போகவில்லை.
அடுத்து தம்பியின் கல்யாணம். அதற்கும் போகவில்லை. அதற்கும் போகவில்லை. ஷோபனா வருத்தப்பட்டாள்."இதுக்கு நீங்க பின்னாடி வருத்தப்படுவீங்க. பிரிஞ்சு இருக்கிற குடும்பங்கள் இப்படி ஒரு விசேஷத்துல சேர்ந்தா தான் உண்டு. அதை செய்யாம - பழைய மாதிரி கோபப்படுவாங்கன்னு ஏன் நினைக்கிறிங்க. என் வீடு போல உங்க வீடு வெறுப்பை உமிழலயே. ஒரு பக்கத்து உறவாவது கிடைக்கும்னு நினைச்சேன். அது நடக்காது போலிருக்கே" என்றாள்.
இடையில் எனக்கு வேலை மாற்றல். ஊர் மாற்றம். ஷோபனா கர்ப்பம் ஆனாள். கல்யாணமாகி இரண்டே முக்கால் வருஷம் கழித்து. சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அதை பகிர்ந்து கொள்ள மூன்றாவதாய் ஒரு நபர் இல்லை. ஷோபனா எனக்கு தெரியாமல் - அவள் தன் தாய் வீட்டிற்கு சென்றாள். விரட்டியடித்தார்களாம்.
அவள் அதை பெரிசுபடுத்தவில்லை. "யார் அடிச்சா. அப்பா தானே" என்றாள். என்னை என் வீட்டிற்கு போக சொன்னாள். தான் கர்ப்பமாய் இருப்பதை சொல்ல சொன்னாள். திரும்பவும் பயம், வெட்கம்... போகவில்லை.
மனிதர்கள் எப்போதும் சந்தோஷத்தில் இருந்து விடுவதில்லை. சோகப்புயல் அவர்கள் வாழ்வில் அடிக்கத் தான் செய்யும். எங்கள் வாழ்க்கையிலும் அடித்தது. ஆனால் அது மீள முடியாத புயல்.
ஷோபனாவுக்கு இருபது நாள் டெலிவரிக்கு இருந்தது. அலுவலக வேலையாக வெளியூர் பயணம். கிளம்பிவிட்டேன். நாங்கள் இருந்தது, திருடர்களும் கூட கொள்ளையடிக்க தயங்கும் ஒரு புறநகர் பகுதி. புறநகர் என்று சொல்வதை விட காடு எனலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாய் வீடு.
பிரசவ வலி வந்திருக்கிறது ஷோபனாவுக்கு. வலியால் துடிக்க, உதவக் கூட ஆளினின்றி... நான் சென்ற போது ஷோபனா கனவு போல் இருந்தது எல்லாம். குழந்தைக்கு கருவரையே கல்லறையாக. அவளது உயிரற்ற உடலை பார்த்தபோது, அப்பா, "என் பாரத்தை பகிர்ந்துப்பேன்னு நினைச்சேன். நீ சுயநலவாதியாயிட்டே" என்று கேட்டது கண்முன் தோன்றியது.
எவ்வளவு அழகாக துவங்கினோம் வாழ்க்கையை. அவர்களை நட்டாற்றில் விட்டு வந்ததற்கு இது தண்டனையா?
இப்படியெல்லாம் வாழ்க்கையில் நடக்குமா? என்னால் தொடர்ந்து அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. தனிமை பயமாய் இருந்தது. பைத்தியமே பிடித்துவிடும் போல தோன்றியது.
அம்மா,"அழாதேப்பா" என்றாள். அப்பா சத்தம் கேட்டு மாடியிலிருந்து இறங்கி வந்தார். என்னை பார்த்து, "தம்பி" என்றார்.
"அம்மா" என்று அழுதேன். "அழக்கூடாது" என்று அம்மா கண்ணை துடைத்துவிட்டாள். ஷோபனா சொன்ன மாதிரி எப்போதோ வந்திருக்க வேண்டியவன். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டு வந்திருக்கிறேன். அப்பா அருகில் வந்தார். ஆறுதலாய் தொட்டார். "யாருக்கும் உன் மீது கோபம் இல்லை. சாப்பிட்டியா. ஜெயந்தி... காபி கொண்டு வா" என்றார். அம்மாவையே பார்த்தேன். காபியை வாங்கி அம்மாவே எனக்கு புகட்டினாள். கருவிலேயே இறந்த போன என் குழந்தையின் ஞாபகம் வந்தது
No comments:
Post a Comment