பிறப்பு:சாளரம்(கார்க்கி)
வழக்கமாய் தெய்வங்கள் நிறைந்து காணும் அந்த பெருமாள் கோவில் வெள்ளிக்கிழமை ஆனால் மட்டும் தேவதைகளால் நிரம்பி காணப்படும். அப்படி ஒரு தினத்தில் மதனும் கோவிலுக்கு வந்திருந்தான். வராது வந்த நாயகன் வந்ததாலோ என்னவோ மழை வந்தது.
ட்யூஷன் முடிந்து நேராக வந்ததால் கையில் சில புத்தகங்கள் வைத்திருந்தான். படித்து கிழிக்க வேண்டிய பக்கங்களை நனைய விடக்கூடாது என்பதற்காக கோபுரத்தை நோக்கி திரும்பிய அவனை ஒரு குடை இடித்தது. கூண்டுக்குள் மட்டுமே கிளியைப் பார்த்த அவனுக்கு குடைக்குள் ஒரு பஞ்சவர்ண கிளியைப் பார்த்ததால்,அது என்ன சொல்வார்கள் ஆங்ங், கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவள் உதடு பிரிந்தபோது உள்ளே இருந்த பற்களை பார்த்தான். "தங்கப்பல் தானே உண்டு, இவள் என்ன வைரப்பற்களை வைத்திருக்கிறாள்".மைன்ட் வாய்ஸ் முடிந்த போதுதான் அவள் ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.
"ஒரு குடைக்குள்ள எப்படிங்க ரெண்டு பேரு? அதுவும் குடை சின்னதா இருக்கு" என்று சொல்லும்போது வழிந்ததை மழைத்துளி வந்து மறைத்தது.
ஹலோ.புக்ஸ கொடுங்கனு சொன்னேன்.
தேவதைகள் பேச மாட்டார்கள் என்று எப்போதோ படித்தது தப்பென்று தெரிந்துக் கொண்டான்.
புக்ஸைக் வாங்கிக் கொண்டு கோபுரத்தை நோக்கி நகர்ந்தது அந்தச் சிலை. அவளுக்கு முன் வேகமாய் ஓடி நல்ல இடமாக பார்த்து நின்றுகொண்டான். அவனருகில் ஒரு பெரியவர் வர, ஆள் வராங்க என்று டவுன் பஸ்ஸில் இடம் பிடிப்பது போல் நகர்த்தினான். அம்மன் என்று பக்தரைத் தேடி வந்திருக்கிறது? நேராக தன் தோழிகளுடன் சென்று விட்டாள். கொஞ்ச நேரம் சினேகம் காட்டி சன் டீ.வி கழட்டிவிட்ட கேப்டன் போல ஆகி விட்டான் மதன்.
நண்பனின் ஆளைப் பார்க்க கோவிலுக்கு வந்தவனுக்கு அருள் புரிந்த பெருமாளை(அவரில்லைங்க) சேவித்து விட்டு சந்தோஷமாய் வந்தான். அடுத்த வாரம் வந்தால் புடித்து விடலாம் என நினைத்தவனுக்கு உடனே அருள் புரிந்தார் பெருமாள். கோவில் வாசலில் கையில் புக்ஸூடன் சரஸ்வதியே நிற்பது போலிருந்தது.
புக்ஸ் வேணாமா? நிஜமா உங்களதுதானே?
ஆமாங்க. சாமி கும்பிட போயிட்டேன்.
உங்களுக்காக வெய்ட் பண்றேன். கூட வந்தவங்க எல்லாம் போயிட்டாங்க
மூளையில் பல்பெரிந்தது மதனுக்கு.
எங்க வீடுன்னு சொல்லுங்க. என்கிட்ட பைக் இருக்கு என்றான்.
சிறிது நேரத் தயக்கதுக்குப் பின், ஹவுஸிங் போர்ட் என்றாள்.
இங்கேயே இருங்க, இதோ பைக் எடுத்துட்டு வர்றேன் என்றவன் ஓடினான். போன மாதம் தான் அந்த பல்சரை வாங்கித் தந்தார் அவன் அப்பா. "லவ் யூ டேட்" என்று வாரணம் ஆயிரம் சூர்யா ரேஞ்சுக்கு பீட்டர் விட்டு வண்டியைக் கிளப்பினான். மதனின் நண்பர்கள் வயிற்றெரிச்சல் புகையாய் வந்தது.
தலப் படத்துக்கு கிளம்பும் ரசிகனைப் போல சீறிக் கிளம்பிய பல்சர் அவளருகில் வந்ததும் படம் முடிந்த வெளியே வரும் ரசிகனைப் போல பம்மியது. வண்டியில் அவள் கைப்பட்டதும் மதனுக்கு லேசாய் சிலிர்த்தது. இதை கவனித்த அவள் புன்னகைக்க மதனின் கைகள் ஆக்ஸிலேட்டரை முறுக்கியது.புன்னகை தொடர்வதை கவனித்தான்.
பேசிக்கொண்டே பயணித்தார்கள். உங்களுக்கு தாவனி ரொம்ப நல்லாயிருக்குங்க. மெல்ல ஆரம்பித்தான் மதன். அப்புறம் என்ன என்பது போல அவளும் ம் சொல்ல, பட்டியல் இட்டான். பாரதிராஜா படத்து வெள்ளை தேவதைகள் அவனை சுற்றி வர, அனைத்தும் வெள்ளையிலே இருக்கும்படி வர்ணித்தான்.அவள் சத்தமின்றி சிரிப்பதை எல்லாம் ரியர் வியூ மிரரில் நோட்டமிடத் தவறவில்லை அவன்.
ஹவுசிங் போர்டு. ஊருக்கு ஒதுக்கு புறமான ஏரியா. போகிற வழியில் விளக்குகள் எல்லாம் உண்டு என்றாலும் சாலையில் இருந்து சில மீட்டர் தூரத்திலே இடுகாடு. எப்படி தனியாக போவாள் என்று யோசித்தான். சரியாக இடுகாட்டின் அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் பதிலுக்கு காத்திராமல் இடுகாட்டை நோக்கி நடந்தாள் அவள்.
இவன் கண்களில் அகப்படாமல் ஒரு நிழலில் அவள் மறைய, பேயறைந்தவன் போல் ஆனான் மதன். சில வினாடிகளில் சுதாரித்தவன் ஒரு பெண்ணே தனியா போகும்போது நமக்கென்ன என்றபடி நகத்தை கடிக்கலானான். எங்கே போயிருப்பாள்? என்ன அவசரமோ என்றபடி அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான். ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும். ஒரு பக்கம் கும்மிருட்டு. அவள் சென்ற திசையை நோக்கிப் பார்வையை மீண்டும் திருப்பியவன் அலறியடித்துக் கொண்டு வண்டியிலிருந்து சரிந்தான்.
அங்கே.. அவள்.. வெள்ளை சேலை.. வெள்ளை ரவிக்கை... வெள்ளை வளையல் என அனைத்தும் வெள்ளையாய். ஆனால் சிரிப்பு மட்டும் வெள்ளையாய் இல்லை. இவன் கேட்டது போலவே அவள் வந்தும் மதனால் பார்க்க முடியவில்லை. அவள் சிரித்த முதல் சிரிப்பின் எதிரொலி அடுத்த சிரிப்போடு மோதும் போது மதனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே விட்டது.காரணமே இல்லாமல் அவளின் மெல்லிய புன்னகை ஒரு கணம் அவன் முன் நிழலாடி சென்றது. மதனை நோக்கி வர ஆரம்பித்தாள். அவள் நடக்கிறாளா இல்லை பறக்கிறாளா எனத் தெரியாத படி அவளின் வெள்ளை நிறச் சேலை தரையில் தவழ்ந்தது.
கீழே கிடந்த பல்சரை தூக்கினான். அவனே நேராக நிற்க முடியாத போது 150 கிலோ பைக்கை எப்படி தூக்குவது? ஓடலாம் என்றால் கால் ஆனியடித்தது போல் அங்கேயே நின்றது. இதற்குள் அவள் மதனை நெருங்கிவிட்டாள். மீண்டும் அதே போல் ஒரு சிரிப்பு. ஏதோ சொல்ல அவள் எத்தனித்த போது கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டான்.
“.......”
மெல்ல கண் திறந்தவன் அவளை பார்த்து கேட்டான் "என்ன சொன்னிங்க?"
அவள் மீண்டும் சிரித்து விட்டு சொன்னாள்
“நான் உஜாலாவுக்கு மாறிட்டேன்”
(அவள் சொன்னதை படிக்க மேற்கோள் குறிக்குள் இருப்பதை செலக்ட் செய்யவும்.)
No comments:
Post a Comment